Vikrama... Vikrama... - Part 1
5/5
()
About this ebook
இந்த மாபெரும் நூலில் உள்ள விக்கிரமாதித்தன் கதை நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான். காக்கையிடம் வடையை பெற நரி செய்த தந்திரம் பற்றி ஒரு கதை உண்டு. அனேகமாக இதை அறியாதவர்கள் இருக்க முடியாது.
அதற்கு பிறகு அனைவரும் அறிந்த அல்லது அறிய வேண்டிய ஒரு கதை விக்கிரமாதித்தன் கதை!
விக்கிரமாதித்தன் என்ற உடனேயே வேதாளம் நினைப்பும் நமக்கு வந்துவிடும். அன்று பள்ளி மாணவர்களாக இருந்து இன்று குடும்பஸ்தர்களாகிவிட்டவர்கள் நிச்சயம் விக்கிரமாதித்தன் பற்றியும் அவன் தம்பி பட்டி பற்றியும் அறிந்திருப்பார்கள்.
ஆனாலும் அவன்பற்றி மிக விரிவாகவும் அதே சமயம் வேதாளம் அவனுக்கு சொன்ன கதைகளை புதிய கோணத்திலும், உரிய முறையிலும் பார்த்து சில மாற்றங்களுடன் நான் இந்த விக்கிரமாதித்தன் கதையை வழங்கியுள்ளேன்.
அந்த நாளைய விக்கிரமாதித்தன் கதையோடு அவன் இன்று பிறந்திருந்தால் எப்படி இருக்கும் என்றும் சிந்தித்து அதன் போக்கிலும் ஒரு கதை இதில் சொல்கிறது.
Read more from Indira Soundarajan
Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Sivam Rating: 4 out of 5 stars4/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5
Related to Vikrama... Vikrama... - Part 1
Related ebooks
Vikrama... Vikrama... - Part 2 Rating: 5 out of 5 stars5/5Chandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsPon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Athirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Sorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Theeviniley Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Kannan Varuvan Rating: 0 out of 5 stars0 ratingsKrishnadaasi Rating: 5 out of 5 stars5/5Antha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Thulli Varukuthu Vel Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Athimalai Devan - Part 2 Rating: 2 out of 5 stars2/5Udhayachandran Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Harry Potter Kadhaigal Rating: 5 out of 5 stars5/5Aairam Arivaal Kottai Rating: 5 out of 5 stars5/5Pallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Roja Malarum Neram Rating: 4 out of 5 stars4/5Saranagadhi Rating: 5 out of 5 stars5/5Aairam Jannal Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsPokkishathin Saavi Rating: 5 out of 5 stars5/5Thangap Paravai Rating: 5 out of 5 stars5/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5Kanbathellam Unmai Rating: 5 out of 5 stars5/5Vadakke Oru Pudhayal! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vikrama... Vikrama... - Part 1
1 rating0 reviews
Book preview
Vikrama... Vikrama... - Part 1 - Indira Soundarajan
www.pustaka.co.in
விக்ரமா... விக்ரமா...
(பாகம் 1 )
Vikrama... Vikrama...
(Part 1)
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For other books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
ஒரு முக்கியச் செய்தி!
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
மீண்டும் வருவேன்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
உன்னை விட மாட்டேன்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
வசப்படுவாயா?
புதிருக்குள் ஒரு புதிர்
‘தொடத் தொட தொடரும்'
'அந்த பதினெட்டு பேர்!'
'தீபா என் தேவதையே'
என்னுரை
இந்த மாபெரும் நூலில் உள்ள விக்கிரமாதித்தன் கதை நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான். காக்கையிடம் வடையை பெற நரி செய்த தந்திரம் பற்றி ஒரு கதை உண்டு. அனேகமாக இதை அறியாதவர்கள் இருக்க முடியாது.
அதற்கு பிறகு அனைவரும் அறிந்த அல்லது அறிய வேண்டிய ஒரு கதை விக்கிரமாதித்தன் கதை!
விக்கிரமாதித்தன் என்ற உடனேயே வேதாளம் நினைப்பும் நமக்கு வந்துவிடும். அன்று பள்ளி மாணவர்களாக இருந்து இன்று குடும்பஸ்தர்களாகிவிட்டவர்கள் நிச்சயம் விக்கிரமாதித்தன் பற்றியும் அவன் தம்பி பட்டி பற்றியும் அறிந்திருப்பார்கள்.
ஆனாலும் அவன்பற்றி மிக விரிவாகவும் அதே சமயம் வேதாளம் அவனுக்கு சொன்ன கதைகளை புதிய கோணத்திலும், உரிய முறையிலும் பார்த்து சில மாற்றங்களுடன் நான் இந்த விக்கிரமாதித்தன் கதையை வழங்கியுள்ளேன்.
இதை பாக்கெட் நாவலில் வாசித்த சில வாசக அன்பர்கள் மிகவும் நெகிழ்ந்துபோய் தொடர்ச்சியாக எனக்கு கடிதம் எழுதியும், போனில் பேசியும் ஊக்கப்படுத்தினார்கள்.
விக்கிரமாதித்தன் கதை ஒரு வகையில் நமது தேசத்து சொத்து. ராமாயண, மகாபாரதம் போல விக்கிரமாதித்தன் கதையும் காலம் கடந்து நிற்கும் ஒன்றாகும். காரணம் இதில் நவரசங்களும் பொதிந்து கிடக்கின்றன.
எந்த விலக்கத்திற்கும் பொருந்தும் விஷயங்கள் உள்ளடக்கமாக உள்ளன.
நானும் காதில் விழுந்த கதையை அப்படியே எழுதிவிடவில்லை. எனது சிந்தனைகளையும் சேர்த்தே எழுதியுள்ளேன்.
அந்த நாளைய விக்கிரமாதித்தன் கதையோடு அவன் இன்று பிறந்திருந்தால் எப்படி இருக்கும் என்றும் சிந்தித்து அதன் போக்கிலும் ஒரு கதை இதில் சொல்கிறது.
முன்பே 'அன்று இன்று' என்கிற காலத்தில் சரித்திர சமூக நாவல்களாக ஐந்து வழி மூன்று வாசல் ருத்ரவீணை முதலிய தொடர்களை நான் ஏற்கெனவே எழுதியுள்ளேன்.
இது என் இன்னொறு முயற்சி.
ஒரு வகையில் பிரம்மாண்ட முயற்சியும்கூட.
இன்று நடந்து கொண்டிருப்பது டி.வி. யுகம்.
படிப்பவர்கள் குறைந்து பார்ப்பவர்கள் அதிகரித்து வருவதாக பலரும் கூறிடும் ஒரு காலகட்டம். ஆனால் இந்த 'விக்ரமா' நாவலோ வாசக உலகில் பலத்த வரவேற்பிற்கு உள்ளானது...
பலர் இந்த நாவலில் காலத்தை வென்று வாழும் என்றனர். சிலர் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் முழுக்க கொண்டு செல்லவேண்டும் என்றனர்.
அவர்கள் அவ்வாறு கூற பல காரணங்கள் உள்ளன. அரிய செய்திகள், தத்துவங்கள், நம்பிக்கைகள் இந்த நாவலில் ஒரு மலர் மாலையில் உள்ள பலவித மலர்களைப் போல ஒன்று சேர்ந்து கிடக்கின்றன. எனக்கும் மிகமிக நிறைவை தந்தது.
விக்கிரமாதித்தன் கதையை கேட்பவர்கள், சொல்பவர்கள், எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், வாங்குபவர்கள், அச்சிடுபவர்கள் என்று அவ்வளவு பேரும் வாழ்வில் பல நலன்களைப் பெறுவார்கள் என்பது போஜராஜனிடம் பதுமைகள் கூறியிருக்கும் ஒரு அரிய செய்தி. போஜராஜனும் விக்கிரமாதித்த ராஜனின் பெருமையை அறிந்து பின் அவன் அமர்ந்த ரத்ன சிம்மாசனத்தில் தான் அமர்ந்து ஆட்சி செலுத்தினான்.
மொத்தத்தில் விக்கிரமாதித்தன் கதை ஒரு வற்றாத ஜீவநதி போன்றது. பலவித உணர்வுகளை மனதில் உருவாக்க வல்லது.
நம்பிக்கையின் களத்தில் நமக்கு அரிய நலன்களை அளிக்கக் கூடியதும்கூட...
எப்படி 'சுந்தர காண்டம்' புத்தகம் வீட்டில் இருந்தால், அதை வாசித்தால் எல்லா நலன்களும் பெருகுமோ அப்படியே விக்கிரமாதித்தன் கதையும் நன்மைகள் தரவல்லது.
உங்கள் கையில் உள்ளது முதல் பாகம்தான்.
32 காண்டங்களில் எட்டு காண்டங்களே!
மீதி உள்ள 24 காண்டங்களும் அடுத்த பாகத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து முடியும்.
இந்த முதல் பாகம் உங்களை ஒரு இடைவேளையுடன் நிறுத்தி அடுத்த பாகத்துக்கு தயார்படுத்தும். புத்தகம் படிப்பதை நலமாக கருதுபவர்களுக்கு இந்த நூல் ஒரு ராஜ விருந்தாக அமையும் என்பது நிச்சயம்.
வாசியுங்கள்.
மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.
நன்றி
அன்புடன்
இந்திரா சௌந்தர்ராஜன்
விக்ரமா! விக்ரமா!
(முதல் காண்டம்)
ஒரு முக்கியச் செய்தி!
'விக்கிரமாதித்தன் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்களும் கிடைக்க வேண்டும்' என்று போஜராஜன் வேண்டிக் கேட்டுக்கொள்ள விக்ரமாதித்தன் கதையைச் சொன்ன 32 பதுமைகளும் 'அவ்வாறே ஆகட்டும்' என்று ஆசீர்வதித்தனவாம். அப்படியானால் இதை வாசிக்கும் உங்களுக்கும் எல்லா நலன்களும் இனி ஏற்படப் போகின்றன!
1
நகரங்களில் தெற்கில் காஞ்சி புகழ்மிக்கது - அதைவிட புகழ்மிக்கது வட புலத்து உஜ்ஜயினி!
இந்த உஜ்ஜயினியின் சக்கரவர்த்திதான் விக்கிரமாதித்தன்.
இவனது அன்புத்தம்பி பட்டி.
விக்கிரமாதித்தன் எள் என்றால் பட்டி எண்ணெயாக நிற்கக் கூடியவன்.
விக்கிரமாதித்தனுக்கு ஒரு பெரிய மனக்குறை.
உஜ்ஜயினி பெரிய நகரம்தான். மாதம் மும்மாரியும் பொழிகிறது. மக்களும் சுபிட்சமாக வாழ்கிறார்கள். ஆனாலும் பரந்த இந்த உலகத்தில் உஜ்ஜயினி ஒரு மைப்புள்ளி அளவு நிலம் பரப்புகூட இல்லாத ஒரு தேசம் என்றால் அது மிகையே இல்லை.
உண்மையில் தான் ஒரு சக்கரவர்த்தி என்றால், இந்த உலகத்தையே கட்டி ஆளவேண்டும். 'உலகின் ஒரே நிகரில்லாத சக்கரவர்த்தி யார்' என்று கேட்டால் 'அவன் விக்கிரமாதித்தன்' என்றே எல்லோரும் கூறவேண்டும்.
'அதற்காக இந்த மொத்த உலகை வசப்படுத்த என்ன வழி?' - என்று விக்கிரமாதித்தன் தன் அன்புத்தம்பி பட்டியிடம் கேட்க, பட்டிக்கும் ஒரு எண்ணம் தோன்றியது.
அண்ணா... எந்த ஒரு எண்ணமும் செயலாக-வாழும் இடம் முக்கியம். நீ உலகச் சக்கரவர்த்தியாக விளங்குமுன் உஜ்ஜயினி ராஜ்ஜியத்துக்கென தோஷங்கள் இல்லாத வாஸ்து பலம் மிக்க ஒரு பட்டணத்தை நிறுவ வேண்டும். முதலில் அப்படி ஒரு பட்டணம் வசப்பட்டுவிட்டால், அதன்பின் அதில் ஆட்சி புரிந்தபடியே உலகையே வசப்படுத்திவிடலாம்.
என்றான்.
பட்டியின் யோசனை விக்கிரமாதித்தனைப் புளகாங்கிதப் படுத்திவிட்டது.
பட்டி... நீ ஒரு நிறைந்த மதியூகி. ஏற்ற ஆலோசனைகளை உற்ற நேரத்தில் சொல்வதில் நிகரில்லாதவன். நீயே தலைநகர் அமைக்க சரியான வாஸ்து பலம் உள்ள ஒரு இடத்தையும் தேர்வு செய்
என்று விக்கிரமாதித்தன் பணிக்க, பட்டியும் தனக்கு ஏற்ற ஒரு புரவியைத் தேர்வு செய்து கொண்டு இடம் தேடி பயணிக்கலானான்.
மனதுக்குள் அவனது குலதெய்வத்தையும் பிரார்த்தித்துக் கொண்டான்.
வழியில் ஒரு ஆலவனம் குறுக்கிட்டது.
எங்கு பார்த்தாலும் ஆலமரங்கள்தான். வேறு மரங்களே இல்லை. இப்படி ஒரு வனம் அமைவது என்பது அபூர்வம். அதேபோல ஒரு ஆலமரத்துக்கும் மறு ஆலமரத்துக்கும் இடையில் அளந்து உருவாக்கியது போல வட்டவடிவில் பொய்கைகள். அதில்கூட வெள்ளைத் தாமரைகள்!
பார்க்கப் பார்க்க வெகு ரம்யமாக இருந்தது அந்த இடம். நல்ல வாசம் கலந்த காற்று... அங்கங்கே மரக்கிளைகளில் அடையடையாய்த் தேனடைகள்!
மான் ஒன்று துள்ளிக்கொண்டு ஓடியது! என்ன ஆச்சரியம்! எதிரில் ஒரு வேங்கைப்புலி. ஆனால் அந்தப்புலி அந்த மானை எதுவும் செய்யவில்லை. மாறாக மிக சாதுவாக வந்து பொய்கை நீரைக் குடித்துவிட்டுச் சென்றது.
அந்தப் பொய்கையின் நடுவில் முருகன் கை திருவேல் போன்று ஒன்று நடப்பட்டிருந்தது. நேர்மேலே ஆலவனக் கிளைகள் பந்தல்போல் அடைத்தபடி இருந்தன. அதில் ஏழு சக்கர உரிகள்.
கிருஷ்ண ஜெயந்தியின் போது மூங்கில் மரங்களின் இடையே கயிறு கட்டித் தொங்கவிடப்படுவது போல் இருந்த அந்த ஏழு உரிகளும் கீழே பொய்கை நீரின் மிசை பிம்பங்களாய் தெரிந்தன.
பொய்கைக் கரையில் ஒரு ஓங்கலான மட்டப்பாறை! பாறைமேல் அன்னை மாகாளியின் உருவச்சிலை.
சிலை கழுத்தில் அப்பொழுது சூட்டப்பட்டது போல அன்றலர்ந்த மலர்களின் மாலைகள். இருபுறமும் எண்ணிரு பதினாறு தீபங்களின் சுடர்கள்!
கந்தகமும் புகைந்து வாசமெழுப்பியபடி இருந்தது. அற்புதமான அந்த காட்சி பட்டியின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது. அதே சமயம் பட்டியின் உள்ளத்தில் அந்த மட்டப்பாறை காளியை வணங்க வேண்டும் என்ற ஆசையும் எழும்பியது.
அதன் நிமித்தம் குதிரையை ஒரு ஆலமர விழுதின் பிடியில் கட்டிவிட்டு பொய்கையில் இறங்கி நீராடினான். பின் ஈரத்தைத் துவட்டிக்கொண்டு காளியை வணங்குவதற்காக பாறையை நெருங்கிய போதுதான், அங்கு காளியின் பாததூளி அருகே பொறிக்கப்பட்டிருந்த செய்தி கண்ணில்பட்டது.
'தாள் பணிவார் நேர்விழிகளுக்கோர் அறிவிப்பு.
மந்த்ரப்ரஸாதியான இந்த மாகாளியின் பேரருளைப் பெற வேண்டுமாயின் பொய்கைக்கு நேர்மேல் தொங்கியபடி இருக்கும் ஏழு உரிகளையும் ஒரே சமயத்தில் வெட்டி வீழ்த்திவிட்டு அவை மண்ணிலே விழும்முன் எவனொருவன் பொய்கையின் மையத்திலிருக்கும் கூர்மிகு வேலாயுதத்தில் விழுந்து உயிரார்ப்பணம் செய்கின்றானோ, அவன் இப்பூவுலகை எல்லாம் ஒரு குடையின் கீழ் ஆளும் பேறும், வல்லமையும் பெறுவான். மேலும் பல வரங்களை மந்த்ரப்ரஸாதியான காளிகாதேவி வழங்குவதும் சர்வ நிச்சயம்!'
- என்று செய்தியிருக்க, அதைப் பார்த்த நொடி பட்டிக்குள் 'ஆஹா! உலகின் சக்ரவர்த்தியாக மாற என்ன ஒரு அரிய வாய்ப்பு' என்றுதான் தோன்றியது.
அந்த நொடி பட்டியேகூட வாளெடுத்து உரிகளை ஒரு முழுவீச்சில் வெட்டி வீழ்த்திவிட்டு வேலின்மீது விழுந்து உயிரார்ப்பணம் செய்யலாம்தான். ஆயினும் தன் அண்ணனும் சக்கரவர்த்தியுமான விக்கிரமாதித்தனின் வேண்டுதல்தான் முதலில் நினைவில் வந்தது.
'அண்ணா... விக்கிரமாதித்தா!
உனக்கேற்ற அரிய வாய்ப்பு இதோ...
இதில் மட்டும் நீ வெற்றி பெற்றுவிட்டால், உலகின் ஒரே சக்கரவர்த்தி நீதான்' என்று நினைத்துக் கொண்ட பட்டி உடனேயே காளியை வணங்கித் தொழுதுவிட்டு, விக்கிரமாதித்தனைச் சந்தித்து விஷயத்தைக்கூற அங்கிருந்து புறப்படலானான்!
அடுத்து...?
***
வள்ளுவக்குடி என்கிற அந்தப் பெயர்ப்பலகை பெயிண்ட்டெல்லாம் உதிர்ந்து பார்க்கவே பங்கரையாக இருந்தது. அதனருகே வந்து நின்ற பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப் ஒன்றில் இருந்து திபுதிபுவென சிலர் கீழே குதித்தனர். நின்று அந்த போர்டை ஒரு பார்வை பார்த்தனர். அப்படியே அந்தப் போர்டை ஒட்டி நீளும் மண்சாலையையும் பார்த்தனர். மண்சாலையின் இருபுறமும் காய்ந்த அறுவடையான வயல்கள். ஒதுங்க இடமில்லாதபடி சமதையான தளம். எங்கும் ஒரு கருவேலம்கூட வளர்ந்திருக்க வில்லை.
அதனாலோ என்னவோ அங்கிருந்தே வள்ளுவக்குடி என்கிற அந்தப் புராதன கிராமத்தைப் பார்க்கமுடிந்தது. ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த மண்சாலை.
ஜீப்பில் வந்தவர்களில் சஃபாரி சூட் போட்டவர்தான் மேலதிகாரிபோல் இருந்தது.
கூட வந்தவர்கள் கையைக் கட்டிக்கொண்டு தலையை ஆட்டுவதில் இருந்தே அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
"இந்தப் போர்டை நல்லா சுரண்டிட்டு தமிழ்லையும் இங்கிலீஷ்லயும் எழுதிடுங்க. அதே போல, இந்த மண்ரோடு இன்னும் மூணே நாள்ல தார்ரோடாயிடணும். ஓரமாகூண்டுவெச்சி உள்ற தூங்குமூஞ்சி மரக்கன்னுகளையும் ஞாபகமா வெச்சுடுங்க.
வரப்போறவர் நிதி மந்திரியா இருக்கலாம். இருந்தாலும் எல்லா இடமும் பசுமையா இருக்கணும்னு எதிர்பார்க்கறவர்… மொட்டையா ஒரு ரோடு இருந்தாலும் பிடிக்காது. மத்திய மந்திரிவேற! போற போக்குல மினிட் நோட்ல ஒரு வார்த்தை நம்ம டிபார்ட்மெண்ட்பத்தி எசகுபிசகா எழுதினாலும் கதை முடிஞ்சிருச்சு. நான் அசிஸ்டென்ட் எஞ்ஜினியாராவே என்சர்வீசை முடிச்சிக்கிட வேண்டியதுதான். நீங்களும் சர்வேயர் லெவல்லயே வீட்டுக்குப் போகவேண்டியிருக்கும்."
-அந்த சஃபாரி சூட்காரர் பேசியதற்கு பலமான தலையாட்டலைப் பதிலாக வைத்த அந்த இருவரும் சார் உறுதியா மந்திரி இந்த வள்ளுவக்குடிக்கு வாராறா சார்?
என்று கேட்க, அவர் முகத்தில் அசாதாரண மாறுதல்கள்.
ஏய்யா... இல்லாட்டி இந்த மண்ரோட்டை தார் ரோடா போடச்சொல்லி ஏன்யா சொல்றேன். நம்ம டிபார்ட்மெண்ட்ல ஃபண்டு என்ன கொட்டியா கிடக்குது...
- சீறினார்.
அதுக்கில்ல சார். நம்ம பிரைம் மினிஸ்டர்கூட ஒருதடவை வரப்போறதா சொல்லி கடைசில வராம போய்ட்டார். மண் அடிச்சு சுத்தம் பண்ணி அறுபதாயிரம் செலவு செஞ்சதுதான் மிச்சம். அதான் கேட்டோம். அதுவும் சரிதான். பிரைம் மினிஸ்டர் வராம போனதுக்கு காரணமே வேற. அப்பப் பார்த்து அவருக்கு வேற முக்கியமான ஜோலியா போய்டுச்சு. ஆனா இப்ப வரப்போற மந்திரி அப்படி இல்ல. நம்ம வள்ளுவக்குடி தில்லைநாயகம் சொல்ற நாடி ஜோசியத்துக்காக இந்தியாவையே பதிலுக்குக் கேட்டாலும் பிடியுங்கன்னு எழுதிக்கொடுத்துடக் கூடியவருய்யா. புரியாம பேசாதீங்க.
அது சரி... இப்ப எதுக்கு சார் மினிஸ்டர் வர்றாரு?
அதெல்லாம் அரண்மனை ரகசியம். நாடி ஜோசியம் பார்க்க வர்ராருன்னு கேள்வி. யாருக்குத் தெரியும்? நீங்க மளமளன்னு வேலையைப் பாருங்க.
-சஃபாரி உத்தரவு போட்டுவிட்டு கழண்டுகொண்டு திரும்பவும் ஜீப்பில் ஏறினார்.
அவர்களும் தலையிலடித்துக்கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.
ஒரு கோழி வியாபாரி ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு போனான். பதநீர் விற்கும் கிழவி ஒருத்தி மந்திரி எங்க ஊருக்கு வாராராக்கும்?
- என்று கேட்டுவிட்டு
நாங்க தினம் நடக்கறோம். ஆனா நாங்க கேட்டப்பெல்லாம் பாதை போடணும்னு தோணலை. ஒருநா வரப்போற மந்திரிக்கு மேடு பள்ளமில்லாத பாதை கேக்குதாட்டம் இருக்கும். எங்களை எல்லாம் எங்க ஆத்தா முதுகுப் பக்கம் வெச்சு பெத்துப்புட்டா... மந்திரியைத்தான் அவுக ஆத்தா வவுத்துல சொமந்து பெத்துருக்கா போல இருக்குது...
கிழவியின் புலம்பல் சர்வே செய்ய ஆரம்பித்தவரை ஒரு கீறு கீறியது.
ஏ கெழவி! வாய மூடிகிட்டு போகமாட்டே...
என்று ஒரு எகிறு எகிறினார்.
வள்ளுவக்குடிக்குள் எண்ணி நூறு வீடுகள் இருந்தால் அதிகம். அது என்னவோ சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் வீட்டு முகப்பில் வாழைமரத்தை நட்டு குலைதள்ள வைத்திருந்தனர்.
ஒரு ஆண்மகன்கூட மேலே சட்டை போட்டிருக்கவில்லை. இடுப்பு வேட்டி, திவ்யமாய் நெற்றியில் பட்டை என்று பார்க்க சைவப்பழங்களாக இருந்தனர்.
எல்லா வீடுகளுமே குச்சு வீடுகள்தான்!
முகப்பில் சிலுசிலுப்பு அப்பி எடுக்கும் விதமாக மொழு மொழுவென்று சிமெண்டு திண்ணை. திண்ணைமேல் கோரைப் பாய் விரிக்கப்பட்டிருந்தது. அந்தத் திண்ணைச் சதுரத்தில் ஈசான்ய பாகத்தில் அகத்தியரின் குட்டி கற்சிலை. அதன் முன் விளக்கெரிய ஊதுபத்தியும் புகையை நெளிய விட்டுக் கொண்டிருந்தது.
அகத்தியரின் சிலைக்கு முன்னால் ஒரு கணக்குப்பிள்ளை மேஜை. அதன்மேல் கைகளை வைத்துக்கொண்டு கித்தாப்பாக சோதிடக்காரர்கள். அவர்கள் சொல்லும் நாடி சோதிடம் கேட்க எங்கிருந்தெல்லாமோ வந்திருந்தார்கள்.
பிரபல சினிமா நடிகர் ஒருவர் கோஷா உடைக்குள் ஒளிந்துகொண்டு வந்து ஒரு திண்ணையில் அமர்ந்திருந்தார்.
அந்தத் திண்ணையில்தான் அதிக கூட்டம்.
முன்னால் ஒரு சிறு பலகையில் 'அகத்தியர் நாடி வாக்கிய நிலையம்' - என்கிற பெயருடன் 'சிஷ்யன் தில்லை நாயக வள்ளுவன்!' என்றிருந்தது.
தில்லை நாயகத்துக்கு ஒரு அசிஸ்டெண்ட். குமரேசன் என்கிற பெயரில் வந்திருப்பவர்களிடம் ரேகை பிரட்டிக் கொண்டிருந்தான். அந்த ரேகையைப் பார்த்து அது வால் சுழிரேகையா, சக்கரரேகையா இல்லை, சங்குரேகையா என்று அறிந்து, அதற்கேற்ப உள்ளே மரப்பிறையில் கிடக்கும் கட்டுகளில் இருந்து நாடிக்கட்டை எடுக்க வேண்டும். அதிலும் கூட ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா என்று உள்பிரிவுகள் இருப்பதாகக் கேள்வி. அதில் எந்தக் கட்டை எடுப்பது, அதை எப்படிப் பிரித்து நாடிபார்க்க வந்த வரை மடக்குவது என்பதெல்லாம் அவர்களுக்கேயுரிய தொழில் ரகசியங்கள்.
சிலர் சொல்கிறார்கள் 'நாம் சொல்வதை வைத்தே நம்மைப் பற்றி அறிந்து அதற்கேற்ற ஏட்டை எடுப்பார்கள்' என்று. பார்க்க அப்படித்தான் தோன்றியது.
அங்கங்கே திண்ணைகளில் நாடி பார்க்க வந்தவர்களைப் பிறாய்ந்து கொண்டிருந்தார்கள்.
உங்கப்பாவோட பேரு க, கீ, கு, கே, கை ல வருமா?
இல்லை.
மா, மீ, மு, மை, மே ல வருமா?
இல்லை.
உங்களுக்கு மூணு தாய் மாமா, அதுல ஒருத்தர்தான் உயிரோட இருக்கணும். சரியா?
ஆமாம்.
உங்க பேர்ல ஆயுதம் ஒண்ணு இருக்கணும் அதாவது வேலாயுதம், சக்கரபாணி இப்படி...
ஆமாம். என் பேர் வேலாயுதம்!
இப்படித்தான் கேள்வியும் பதிலுமாக அங்கே ஓடிக் கொண்டிருந்தது ஜோதிடக்குதிரை.
ஆனால், இந்த மாதிரி போட்டு வாங்கும் விதங்கள் எதுவும் தில்லை நாயகத்திடம் இல்லை. தில்லை நாயகமும் பார்ப்பதற்கு கொஞ்சம் ரமணமகரிஷியின் சாயலில் இருந்தார். யாரோ ஒருவருக்கு நாடி பார்த்து பலன் சொல்லிக்கொண்டிருந்தார். யார் காதிலும் விழுந்துவிடாத மிக மிருதுவான பேச்சு. அங்கே மட்டும் திண்ணையிலும் கட்டிலிலும் ஒரு முப்பது பேர் இருந்தார்கள்.
யாராக இருந்தாலும் வரிசைதான்.
நாளை வரப்போகும் மந்திரிகூட வரிசையில்தான் வர வேண்டும் என்று யாரிடமோ யாரோ சொல்லிக்கொண்டிருக்க, கோஷா உடைக்குள் அந்த நடிகர் நெளிந்து கொண்டிருந்தார். பாவம்... அவரது படங்கள் வரிசையாக புற்றுப்பாம்பு போல டப்பாவுக்குள் அடங்கிவிட்டன. இத்தனைக்கும் அவர் படங்களில் பல தோலுரித்த கோழிகள் நடித்தும் அவருக்கு ஏறுமுகமில்லை.
அவருக்கு வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டாற் போல் இருந்தது. அப்பொழுதுதான் இந்த தில்லை நாயகம் பற்றி ஒருவர் சொல்லி, 'போய்ப் பாருங்கள் - உங்கள் வெற்றிக்கு வழி கூறுவார் என்றார்.
அதுதான் மனிதர் காலையிலிருந்தே வந்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் ஒரு வெள்ளைக்காரரும் இருந்தார். அவரிடம் எப்படி இந்த 'கா, கீ, கூ, கே, கை' சமாசாரங்களை எல்லாம் கேட்பார்கள் என்பது தெரியவில்லை.
அவரிடமும் அலாதி ஆர்வம்... நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருந்தார். அவர் முறை வரவும் தில்லை நாயகம் முன்னால் போய் வணங்கிவிட்டு அமர்ந்தார். கூடவே ஒரு பத்திரிகை நிருபர்.
அவரைப் பார்க்கவும் தில்லை நாயகத்துக்கு விளங்கி விட்டது.
என் நாடிய சோதிக்க வெள்ளக்காரர் ஒருத்தரோடு வந்துட்டீகளா?
நீங்க நல்லா ஏமாறப் போறீக... என்கிட்ட வர்றவுக யாரா இருந்தாலும் அவுகளுக்கு ஏடு இருந்தே தீரும். இல்லாதவர்கள் இந்த ஊர்ப்பக்கமே வரமாட்டாக. நாடியாவது. கீடியாவது எல்லாம் புளுகிணின்னுட்டு போய்கிட்டேயிருப்பாக
- என்ற, தில்லை நாயகம் அந்த வெள்ளைக்காரரின் கட்டைவிரல் ரேகையை வெளிச்சத்தில் வைத்து ஒரு பார்வை பார்த்தார்.
பிறகு கட்டை எடுப்பதற்காக எழுந்திருந்தார். நிருபர் தடுத்தார்.
ஒரு நிமிஷம்!
என்ன சாமி.... அதான் குண்டான் குதுரையா எல்லாக் கேள்விகளையும் கேட்டு பிட்டீகளே. இன்னும் எதான பாக்கியிருக்குதா?
ஆமாம்...
அப்ப சட்டுபுட்டுன்னு அதையும் கேட்டு முடிங்க.
இந்த வெள்ளைக்காரர் அமெரிக்காவுல இருந்து வந்துருக்கார். இவரோ முன்னோர்களோ இதுக்கு முன்னால் இந்தியா பக்கம் வந்ததேயில்லை. ஆனா உங்க வார்த்தைகள்படி, அதாவது இதுக்கு முந்தி பேட்டியில நீங்க சொன்னபடி யாரெல்லாம் அகத்தியருக்கும், அவரோட சிஷ்யர்களுக்கும் சேவை செய்திருக்காங்களோ அவங்களுக்கெல்லாம் அகத்தியர் எதிர்கால ஏட்டை அன்னிக்கே எழுதி வெச்சிட்டதா சொன்னீங்க. அப்படிப் பார்த்தா இந்த வெள்ளைக்காரருக்கும் அகத்தியருக்கும் ஒரு உமியளவு சம்மந்தம்கூட இல்லை. சம்மந்தம் இல்லாதவருக்கு ஏடு மட்டும் எப்படி இருக்கும்...?
- நிருபர் பெரிதாய் மடக்கிவிட்டது போலத்தான் பார்த்தார். தில்லை நாயகம் சிரித்தார்.
சாமி... என்னை இதை விடவும் குண்டாங்குதுரையால்லாம் கேள்வி கேட்டு மடக்கினவங்கள்ளாம் இருக்காங்க. அவங்கள்ளாமும் இப்ப நான் சொல்றததான் வேதம்னு சொல்றாங்க... நான்னா இந்த தில்லை நாயகம் இல்லை. அதோ அங்க குட்டையா சிலையா நிக்கறாரே... என் சாமி... அகத்திய முனிவரு, அவரு.
அப்ப என் கேள்விக்கு தெளிவாவே நீங்க பதில் சொல்லலாமே...
என்னைப் பார்க்க யார் வந்தாலும் அவங்களுக்கு என்கிட்டு ஏடு இருக்கும். அந்த ஏட்டை அவன் எப்ப பாக்கணும்னு விதி இருக்கோ, அவன் இங்க வந்தே தீருவான். அப்படி வர்றவனுக்கு எதிர்காலத்தைத் தெளிவா சொல்லி அனுப்பறதுதான் என் கடமை. அதுக்குத்தான் நான் ஜென்மமே எடுத்துருக்கேன்.
அப்ப இந்த வெள்ளைக்காரருக்கும் அகத்தியருக்கும் ஏதோ சம்பந்தம் இருந்திருக்கணும்னு சொல்றீங்களா?
நிச்சயமா... இவர் இப்ப வேணா வெள்ளைக்காரரா இருக்கலாம். ஆனா முந்தைய ஜென்மங்கள்ள இவர் அகத்திய சாமியோட வட்டத்துக்குள்ள அடங்கியிருந்தே தீரணும். அதை பூர்வஜென்ம காண்டத்தைக் கொண்டு அறியலாம்.
சரி கடைசியா ஒரு கேள்வி...
என்ன?
அகத்தியர் எதுக்கு இப்படி வேலைமெனக்கெட்டு எல்லாருக்கும் பலாபலன்களை எழுதிவைக்கணும்? நீங்க ஏன் அதைப் பாதுகாக்கணும்? இதனால் அவருக்கு என்ன ஆதாயம்?
"நல்ல கேள்விதான். ஆனா இதுக்கு பதிலை ஒரு வரில சொல்ல முடியாது. ஒரு கடுகளவு விதைக்குள்ற கோடிக்கணக்கான மரங்கள் இருக்கற மாதிரி இந்த நாடிகளும் எவ்வளவோ அர்த்தங்களோட இருக்குது. உரியவங்க உரிய நேரத்துல வந்து பலன் தெரிஞ்சுகிட்டு நடந்தா அது ஒரு போக்கு. இல்லாட்டி வேற போக்கு.
யார் கண்டது... இப்ப இந்த வெள்ளைக்காரர் இங்க வந்து தன் எதிர்காலத்தைத் தெரிஞ்சுக்க போறாரு. வரப்போற பலன்ல இவர் சாமியாராவார்னு வருதுன்னு வெச்சுக்குங்க. இவரும் அதைப் பத்தியே நினைச்சு அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கலாம். இல்லாட்டி இவர் இந்த உலகத்தை அழிக்கற அணுகுண்டு தயாரிக்கறவரா மாறிடுவார்னு ஒரு விதி இருந்தா, அப்ப என்ன ஆகும்? யோசிச்சுப் பாருங்க."
அப்ப இங்க வந்து எதிர்காலத்தைத் தெரிஞ்சுகிட்டு நடக்கறவங்களால இந்தப் பூமிக்கு நல்லது நடக்கத்தான் அகத்தியர் ஏடு எழுதி வெச்சிருக்காரா...?
அப்படியும் இருக்கலாம்னுதான் சொல்றேன்.
அது எப்படி 2000 வருஷத்துக்கு முந்தி வாழ்ந்த ஒருத்தர் இப்படி பக்கம் பக்கமா எழுதிவைக்க முடியும்? நல்லா பளிச்சுன்னு உறைக்கற மாதிரி உங்களால் பதில் சொல்ல முடியலையே...?
- அந்த நிருபர் விடுவதாக இல்லை. தில்லை நாயகம் ஒரு பார்வைதான் பார்த்தார். பிறகு 'உன்னிடம் என்னால் பேச முடியாது' என்கிற மாதிரி பார்த்தவர் மளமளவென்று அவரைத் தவிர்த்துவிட்டு உள்ளே சென்றார். அந்த நிருபர் முணுமுணுக்க ஆரம்பித்தார்.
இங்க ஏதோ மர்மம் இருக்கு... அகத்தியர், விசுவாமித்திரர்னு புளுகிக்கிட்டு இருக்காங்க. இல்லாத அந்தத்தாடி முனிவர்கள் பேரால எதைச் செய்தாலும், அவங்க வந்து கேள்வி கேக்கப் போறதில்லைங்கற தைரியம்...
- இப்படியே பலவிதமான முணுமுணுப்புகள். ஒருவர் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
தம்பி... இவ்வளவு சந்தேகத்தோட எதுக்கு இங்கெல்லாம் வர்றீங்க?
- கேட்டார்.
ஏன்யா கேட்கக்கூடாது? இந்த நாட்டுல எது நடந்தாலும் வேடிக்கை பார்க்கணுமா? நான் பத்திரிகைக்காரன்யா. மக்களுக்கு உண்மை எது பொய் எதுன்னு சொல்றவன்.
அப்ப சரி... இங்க வந்து ஏடு பாக்கறவங்கெல்லாம் முட்டாளுங்கன்னு நினைக்கறீங்களா?
ஏன் இருக்கக்கூடாது...?
அது எப்படி தம்பி... சொல்றபடி நடக்கலேன்னா சும்மாவிடுவாங்களா?
சரி... அதையும் பார்ப்போம். இந்த வெள்ளைக்காரர் பத்தி என்னதான் சொல்றார்னு பாக்கறேன்...
- அந்த நிருபர் சவால் விடாத குறையாக மார் தூக்க, ஒரு ஏட்டுடன் உள்ளிருந்து வந்தார் தில்லை நாயகம். போய் தன் ஆசனத்தில் அமர்ந்தார். எதிரில் அந்த வெள்ளைக்காரனை அமர்த்திக் கொண்டார். ஒரு ஆழமான பார்வை. பின் பாடலைப் படிக்க ஆரம்பித்தார்.
'கேளப்பா.... முழத்தில் பாதியைப் பேராகக் கொண்டாய், வழக்கில் குறுமொழியை சீராகக் கொண்டாய். ஜகத்தில் நாடதுவும் ஐம்பதினை மாநிலமாய்க் கொண்ட பூவில் துலாத்தில் ஜனனம், நாளதுவும் துவிதையில் சந்திரனார் பின் விளங்குமப் போர் இருபானார் எட்டு! ஆண்டதுவும் விளம்பியாம்…!'
- பாடலை ஒரு கட்டத்தில் நிறுத்தியவர் நிருபரைப் பார்த்து 'பொருள் புரிஞ்சிச்சா?' என்று கேட்க புரியவில்லை என்று அவரும் தலையாட்ட, 'சொல்றேன் கேட்டுக்குங்க' என்று ஆரம்பித்தார்.
"அதாவது இவர் பேர் முழத்தில் பாதி... முழத்தில் பாதி ஜாண்... அதாவது இவர் பேர் ஜான்! பேச்சு வழக்கில் குறுமொழியைக் கொண்டவர். அதாவது 26 எழுத்து மட்டுமே கொண்ட ஆங்கிலத்தைத் தாய்மொழியாக கொண்டவர். ஜகத்தில்... அதாவது இந்தப் பூமியில் இவர் நாடு ஐம்பது மாநிலம் கொண்ட அமெரிக்கான்னு பொருள்... பிறந்தது துலா மாசத்தில்... அதாவது ஐப்பசியில். தமிழ் தேதி இருபத்தி எட்டு... இங்கிலீஷ் தேதி கணக்குப் பார்த்தா பதிமூணு! அன்னிக்கு துவிதையை திதி... பெளர்ணமிக்கு முந்தி... அதாவது வளர்பிறைல விளம்பி வருஷத்துல பிறந்தவர்!
-இதெல்லாம் சரியான்னு கேட்டுச் சொல்லுங்க..."
- தில்லைநாயகம் அள்ளிக் குவித்ததை அப்படியே அந்த வெள்ளைக்காரரும் ஆமோதிக்க நிருபருக்கு தலையைச் சுழட்டிக் கொண்டு மயக்கம் வராதகுறை!
அடுத்தடுத்து பாடல்களைப் படித்து வரிகளுக்கும் பொருள் கூற அவ்வளவும் அப்படியே அச்சு அசலாகப் பொருந்தியது.
நிருபரைக் கேள்வி கேட்ட நபர் அவர் அருகில் வந்தார்.
ஏங்க... ஓரேடியா முணுமுணுத்தீங்களே... இப்ப என்னா சொல்றீங்க?
நிருபர் எதுவும் பேசவில்லை. திருதிருவென்று விழித்தார்!
இரவு நேரம்!
மணி பதினொன்று!
பகல் முழுக்க ஜோதிடம் பார்த்த களைப்பு நெட்டித் தள்ளும்போது ஊருக்குள் தார்ச்சாலை போட்டபடி இருக்கும் ரோடு ரோலர்களின் சப்தம் தில்லைநாயகம் காதிலும் விழுந்தது.
அந்த நேரத்திலும் ஒரு சஃபாரி சூட் மனிதர் வந்தார். கதவைத் தட்டினார்.
தில்லைநாயகமும் என்னவென்று விசாரிக்க, நாளைக்கு காலைல சரியா ஒன்பது மணிக்கெல்லாம் மினிஸ்டர் வந்துட்றாரு. இங்க மூணு மணி நேரத்துக்கு மேல தங்கலாம்னு எதிர்பார்க்கறோம். மத்த இடங்கள்ள பாதுகாப்பு ஏற்பாடு செய்துட்டோம். உங்க வீட்ல மட்டும் பாக்கி...
அதுக்கு நான் என்ன பண்ணணும்?
ஒண்ணுமில்லை. பாம் ஸ்குவாட்ல இருந்து வந்து வீட்டுக்குள்ள பாம் இருக்கான்னு பார்ப்பாங்க. அப்புறம் செண்ட்ரி காவல் போட்ருவோம். மந்திரி வந்துட்டு போறவரை யாரும் வரவோ போகவோ கூடாது...
இதுக்கெல்லாம் நான் சம்மதிக்கலைன்னா...
உங்கமேல சந்தேகப்பட வேண்டியிருக்கும்...
- பளிச்சென்ற பதில் அந்த சஃபாரிகாரரிடம்.
என் வீட்ல எப்படி பாமும் குண்டும் இருக்க முடியும்? நான் ஜோசியக்காரன். என் வீட்ல ரூம்ரூமா ஏடுங்கதான் இருக்கு.
வாஸ்தவம்தான். ஆனா அவர் உயிருக்கு குறிவைச்சிருக்கறவங்க உங்களுக்கே தெரியாம டைம்பாம் வைக்கலாமே...
அதை ரிமோட்டால வெடிக்கவும் வைக்கலாமே..."
ஊருக்கே ஜோசியம் சொல்றவன் நான். எனக்கோ என் வீட்டுக்கோ அப்படி ஒரு முடிவு கிடையாது. தெரிஞ்சிக்குங்க...
ஒரு அஞ்சு நிமிஷம் நாய் வந்துட்டுப் போறதுல உங்களுக்கு என்ன நஷ்டம்?
- தில்லை நாயகம் சஞ்சலப் பார்வை பார்த்துவிட்டு தன் சந்தனம் உதிராத நெற்றியை இடுக்கிக்கொண்டு சரி... உங்க கடமையைச் செய்யுங்க.
என்றார்.
சற்று நேரத்திலெல்லாம் ஒரு காளைக்கன்னுகுட்டிகணக்காக நாய் ஒன்று அழைத்து வரப்பட்டு உள்ளே நுழைந்தது.
தில்லை நாயகத்துக்கு ஒரு பையன் இருக்கிறான். இளைய வள்ளுவன்.
அப்பா... இன்னிக்கு நம்ம ராசிக்கு புதையல் கிடைக்கப் போகுது பாருங்க
என்று பகல் பொழுதில் இருந்தே சொல்லிக் கொண்டிருந்தான்.
அது உண்மையாகும் போல இருந்தது.
அந்தப் பழைய கால வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்த நாய் அங்கு கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏடுகளை மோந்து மோந்து பார்த்துவிட்டு எங்கெங்கோ ஓடியது.
இறுதியாக வீட்டுக் கொல்லைப் புறமும் சென்றது. கொல்லையில் ஒரு ஆலமரம்!
இது பல நூறு வருஷத்து மரம்!
என்றார் தில்லை நாயகம். அதன் கிளைகளும் எங்கெங்கு எல்லாமோ பரவியிருந்தது.
அதன் பருத்த தண்டு பாகத்துக்குக் கீழே முகர்ந்து பார்த்து விட்டு நாயானது பலமாகக் குரைக்க ஆரம்பித்தது.
அதன் ட்ரெய்னர் திரும்பி தன் சீஃப் இன்சார்ஜைப் பார்த்தார். பாம் ஸ்குவாட் ஹெட்டும் உடன் இருந்தார்.
என்னய்யா?
இங்க கீழே ஏதோ இருக்கு சார்...
அப்படியா... எங்க நகருங்க பார்ப்போம்.
-அடுத்த நொடி அந்த தரைப் பரப்பின்மேல் ஸ்கேனர் ஸ்டிக் ஒன்று ஓடிப்பரவ அதன் தலைபாகத்தில் மினுக்மினுக்கென்று விளக்கெரிந்தது.
தில்லை நாயகத்தை மொத்த போலீஸ் கூட்டமும் ஒரு பகீர் பார்வை பார்த்தது.
என்ன சார் அப்படிப் பாக்கறீங்க?
அங்க விபரீதமா என்னவோ இருக்குய்யா.
சத்யமா எனக்கு எதுவும் தெரியாதுங்க சார்.
முதல்ல தோண்டுங்க. அப்புறம் பேச்சு...
-அடுத்த நொடி பாதுகாப்புடன் சேஃப் கார்ட் சூட் அணிந்த ஒருவர் மண்வெட்டியால் மிக நிதானமாகத் தோண்ட ஆரம்பித்தார்.
ஒரு பவர் லாம்ப்பும் அதீத ஒளியோடு அந்த இடத்தில் விழுந்து ஜொலித்தது.
எல்லோரும் விறைப்பாக பார்க்க, என்ன வருமோ ஏது வருமோ என்று ஒவ்வொருவரும் துடித்தபடி இருக்க மண்வெட்டி எதன் மேலோ பட்டு 'நொட்' என்று சப்தித்தது.
அது...?
2
அரண்மனை உப்பரிகையில் திரைச்சீலை ஒன்றில் ஓவியம் வரைந்தபடி இருந்தான் மன்னன் விக்கிரமாதித்தன்.
இதமான தென்றால் காற்றின் வீச்சு... கிளிக்கூட்டம் ஒன்றின் மாநாட்டுச் சப்தம். சர்வத்தையும் ரசித்தபடி ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தான். திரைச்சீலைக்கு அருகில் ஒரு வெண்துகில் மேல் ஒரு பெண்ணின் நீண்ட தலைமுடி பரவிக்கிடந்தது. அது வளைந்து அலைபோல் நீண்டு கிட்டத்தட்ட மூன்று முழத்திற்கும் மேல் இருந்தது.
திரைச்சீலையிலோ ஒரு அழகிய பெண்ணின் முகம் மெல்ல உருவாகியிருந்தது. குப்பிகளில் மூலிகைச் சாந்துகள். கோந்தும் பசையும் கலந்த வண்ணக்கலவைகள். பூனை முடிப் புரியும், அணில் வால் புரியும் ஓவியம் வரைய உதவும் கலன்களாக அருகில் கிடந்தன.
அப்பொழுது அந்த உப்பரிகையின் வெண்கலச் சேகண்டி 'தும்' என்று சப்தித்தது. அதாவது விக்கிரமாதித்தனைச் சந்திக்க சேவகன் ஒருவன் வந்திருக்கிறான் என்று பொருள்.
வரலாம்...
- என்று விக்கிரமாதித்தனும் குரல் கொடுக்க சேவகன் ஒருவன் பரபரப்பாக உள்ளே நுழைந்து விக்கிரமாதித்தன் எதிரில் மிகப் பணிவோடு வணங்கிவிட்டு வாயைத் திறந்தான்.
மன்னாதி மன்னருக்கு பணிவான வந்தனங்கள். தங்கள் அன்புத் தம்பியும், நமது மகாமந்திரியுமான பட்டியார் தங்களைச் சந்திக்க வந்து கொண்டிருப்பதாகத் தகவல். இப்பொழுதுதான் புறாக் காலில் இருந்த செய்தியை அறிந்தேன். அதையே கூற ஓடோடி வந்தேன்.
-அந்தச் செய்தி கேட்டு விக்கிரமாதித்தன் முகத்தில் உடனே ஒரு பரவசம்.
நல்லது... நீ போகலாம்
- என்ற விக்கிரமாதித்தன் அங்கிருந்தபடியே எகிறிக் குதித்தான்.
தம்பி... நீ இவ்வளவு சீக்கிரம் திரும்புவாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான்.
அதேபோல் சற்றைக்கெல்லாம் பட்டி அமர்ந்து வந்த புரவி அரண்மனைக்குள் பிரவேசிக்க கட்டியக்காரர்கள் வருகையை வேகவேகமாக எதிரொலித்தனர்.
மதிற்காவலாளி அதன் நிமித்தம் மார்பு முழுக்க காற்றை நிரப்பி துந்துபியை முழக்கினான்.
விக்கிரமாதித்தன் காதிலும் அது விழுந்தது.
அதே சமயம் அந்தத் திரைச்சீலை ஓவியம் முற்றாக முடிந்து விட்டிருந்தது.
கண்ணைக் கவரும் அழகிய ஓவியம்.
அங்கங்களில் அவ்வளவு திருத்தம்.
சதைப் பாகங்கள் எல்லாம் பிடித்துப் பிடித்து வைத்தது போல் இருந்தன. கால் விரல்களில் ஒரு விரல் மட்டும் ஏனோ சற்று பெரிதாக நீண்டு வளர்ந்திருந்தது.
உற்சாகமாக உள் நுழைந்த பட்டி அந்த ஓவியத்தைத்தான் முதலில் பார்த்தான். பிறகுதான் விக்கிரமாதித்தனையே பார்த்தான்.
அற்புதம்... அற்புதம்,
என்று கட்டிக் கொண்டவன், விக்கிரமா... என்ன இது? நமது அரண்மனைப் பண்டிதர் மகளின் உருவத்தை வரைந்திருக்கிறாய்...
என்று கேட்க, அப்பொழுதுதான் விக்கிரமாதித்தனே அவள் யார் என்று அறிந்தது போல என்ன... இவள் நமது பண்டிதர் மகளா?
என்று கேட்டான்.
ஆமாம்... இவள் பெயர் அபிவந்தி. பேரழகி. இவளை உனக்குத் தெரியாதா?
தெரிந்தால் கேட்பேனா...?
அப்படியானால் எப்படி இப்படி ஒரு உருவை வரைந்தாய்.
"இதோ இந்தத் தலை முடியைக் கொண்டுதான். பண்டிதர் இன்று காலை என்னைச் சந்திக்க வந்தபோது மாலை அணிவித்தார்.
அவர் சென்ற பிறகு அந்த மாலையைப் பார்த்தேன். அதில் இந்தத் தலைமுடி இருந்தது. இதன் நீட்டமே இது ஒரு பெண்ணுடையது என்பதை உணர்த்திவிட்டது. அதே சமயம் அவள் எப்படிப்பட்ட அழகியாக இருப்பாள் என்பதை யூகித்து சாமுத்ரிகா லட்சண 'சாஸ்திரப்படியும், கூந்தலின் நீளம், விளைவு, பொலிவு இவைகளை வைத்தும், அதன் இழுவை பலத்தை வைத்தும் ஒருவாறு இந்த உருவை வரைந்தேன். அது என்னடாவென்றால் பண்டிதர் மகளைப் போல் அமைந்து விட்டது.
"ஆஹா... என்ன ஒரு பேராற்றல்!
ஒரு தலைமுடியைக் கொண்டு ஒரு உருவத்தையே உன்னால் உணர்ந்து அதை வரையவும் முடிகிறது என்றால், அதை எப்படிப்
பாராட்டுவேன் நான்..."
பாராட்டெல்லாம் பிறகு... நீ போன காரியம் என்னாயிற்று?
அண்ணா... விக்கிரமாதித்தா, உன் ஆசை ஈடேறப் போகிறது. நீ இந்த மண்ணுலகின் சக்கரவர்த்தி ஆகப் போகிறாய். இப்பொழுதே புறப்படு என்னுடன்...
எங்கே... புதிய நகரம் அமைக்க இடம் பார்த்து விட்டாயா?
நகரம் அமைக்க மட்டுமா... உன்னை உலக மகா சக்கரவர்த்தி ஆக்கவும் வழி இருக்கிறது. தாமதிக்காமல் புறப்படேன் முதலில்...
-பட்டியின் அன்பான கட்டளைக்கு ஏற்ப விக்கிர மாதித்தனும் புறப்பட்டான்...
இருவரும் ஆளுக்கொரு புரவியில் அந்த ஆலவனம் நோக்கிப் பயணம் செய்தனர். புரவிகள் இரண்டும் காற்றைப் போல பறந்து சென்றன. சில நாழிகை நேரத்திலேயே அந்த ஆலவனம் வந்து விட்டது!
அந்த ஆலவனம் விக்கிரமாதித்தனையும் பட்டியையும் வெகுவாக மயக்கியது.
தம்பி... நமது ராஜ்ஜியத்திற்கு அருகில் இப்படி ஒரு வனமா...? இத்தனை ஆண்டுகளில் நான் ஒருமுறைகூட இந்தப் பக்கமாக வராமல் போய்விட்டேனே...!
- விக்கிரமாதித்தன் செருமாந்தான்.
எதற்கும் வேளை வரவேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்களல்லவா. அது உண்மைதான்
- என்றான் பட்டியும்.
அப்படியே காளியின் ஆலயம் அமைந்திருக்கும் அந்தப் பாறைக் கோவில் அருகே வந்து கோவில் முகப்பில் ஆலவனக் கிளைகளுக்கு கீழான பொய்கையையும் பார்த்தனர். அதன் நடுவே அந்த சக்திவேல்.
விக்கிரமா... இந்தப் பொய்கையும் இதன் வேலும்தான் உன்னை உலகமகாசக்கரவர்த்தி ஆக்கப் போகின்றன. மரத்திலுள்ள அந்த சக்கர உறிகளைப்பார். பிறகு இதோ இந்தச் செய்தியைப் பார்...
- பட்டி சக்கர உறிகளைக் காட்டிவிட்டு காளியின் முன் பாறைமேல் பொறிக்கப்பட்டிருந்த அந்தச் செய்தியையும் காட்டினான்.
விக்கிரமாதித்தன் கண்கள் அந்தச் செய்தியைப் படித்த நொடி அப்படியே விரிந்து ஒரு ஒளிச்சுடர் போல பிரகாசித்தது. அந்த ஒளிப் புனலோடு உறிகளைப் பார்த்தான். ஏழு உறிகளும் வட்டமாய் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த உறிவட்டத்திற்கு நடுவில் வேல் இருந்தது.
ஒரே வெட்டில் அந்த ஏழையும் வீழ்த்துவது என்பதும், அது விழும் முன் வேலின்மேல் உயிரை ஒரு பொருட்டாய் கருதாது விழுந்து காட்டுவதும் அசாதாரண ஒரு செயலாகவே தோன்றிற்று.
விக்கிரமா... உன்னால் நிச்சயம் ஒரே வெட்டில் இந்த உறிகளை வீழ்த்த முடியும். உன் புத்திக்கு அது எப்படியும் புலப்பட்டுவிடும். பின் அவை விழும் முன் நீ நம்பிக்கையோடு வேலின் மேல் வீழ்தல் வேண்டும். உயிர் போய்விடும், ஏமாற்றப் பட்டுவிடுவோம், இது யாரோ விளையாட்டாக எழுதிவைத்தது போன்ற எண்ணமெல்லாம் இருந்தால் கூறிவிடு...
- பட்டியின் கேள்வி விக்கிரமாதித்தனை முகம் சிவக்க வைத்துவிட்டது.
"பட்டி... இது மிக சூட்சமமான ஒரு போட்டி. விளையாட்டு செய்பவர்கள் இவ்வளவு புத்திசாலித்தனமாகவெல்லாம் யோசிக்கமாட்டார்கள். அப்படியே எழுதிவைத்திருந்தாலும் இந்த வனத்தில் அவர்கள் எங்காவதோ அல்லது இங்கேயோ ஒளிந்திருப்பார்கள். ஆனால், அண்ணாந்து பார்... கிளிக்கூட்டம், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்வதை! இவை மனிதர்களைக் கண்டால் இப்படி கூட்டமாகப் பறக்காது. பிரிந்து தனியாகத்தான் பறக்கும். அப்பொழுதுதான் வேட்டை அம்பிடம் இருந்து தப்பிக்க முடியும் என்பது அந்தக் கிளிகளுக்குத் தெரியும்.
எனவே இது அன்னை மாகாளியின் மனதை மகிழ்விக்க உயிரைத் துச்சமாக மதிக்கும் மனிதர்களும் இந்த உலகில் வாழ்கிறார்கள் என்பதை உணர்த்த அனேகமாக யாராவது ஒரு காளி உபாசகர்தான் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வன தேவதைகள் இப்படி திட்டமிட்டிருக்கலாம்.
ஏனென்றால், இதில் தோற்றால் தோற்றவன் உடலை அவை வந்து தின்பதற்காக ஆசைப் பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் சரி. அன்னை மாகாளி தன்பொருட்டு ஒரு மானுட உயிர் பிரிவதை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டாள். எனவே நான் இந்த உறிச்சக்கரங்களை வீழ்த்தி வெற்றி பெறப்போவது உறுதி" என்ற விக்கிரமாதித்தன் அடுத்து எப்படி ஒரே வெட்டில் வீழ்த்துவது என்று யோசித்தவன் ஏழு சக்கர உறிகளையும் சுழற்றிவிட்டு ஒன்றுடன் ஒன்று சேருமாறு செய்தான். ஒரு கட்டத்தில் ஏழும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு தொங்கி நிற்க, அந்த உறியை ஒரேவெட்டில் வீழ்த்தியவன் வீழ்ந்திடும் அந்த உறிக்கு கீழ் உள்ள வேல் மீது பாய அவன் முதுகின்மேல் அந்த உறிச்சக்கரம் அறுந்து விழுந்து அமர்ந்தது. அதேசமயம் அவன் உடல் அப்படியே வேலின் மீது பட்டு வேலானது மார்பைப் பிளந்தது.
ஜெகன்மாதா காளி ஈ ஈ…
என்று விக்கிரமாதித்தனும் உதடுகள் துடிக்க தன் இறுதி மூச்சை விடும் சமயம், அந்தப் பொய்கை நீரெல்லாம் பூக்களாய் மாறிட வேலானது அப்படியே அன்னை மாகாளியாய் மாறி விக்கிரமாதித்தனைத் தன் இருகைகளால் தாங்கியபடி இருந்தாள்.
பார்த்தபடி இருந்த பட்டி பக்தியோட தாயே... அம்மா... வந்துவிட்டாயா
என்று பரவசப்பட காளியும் விக்கிரமாதித்தனைத் தரையில் கிடத்தி மூர்ச்சை தெளிவிக்க, அவனும் எழுந்து நின்றான். அன்னை மாகாளியையே எதிரினில் கண்டு முதல் காரியமாக அவள் தாளில் விழுந்தான். பின் கண்கள் பணிக்க எழுந்தவன் தாயே உன் தரிசனம் கிடைத்த மகிழ்வில் என் உடம்பெல்லாம் படபடக்கிறது. நான் எவ்வளவு பெரிய பாக்யசாலி
என்று ஆனந்தக் கண்ணீர் விடவும், மாகாளியும் வேண்டும் வரம் கேள்
என்றாள். விக்கிரமாதித்தனிடமோ அசாத்யமான ஒரு மெளனம்.
உன்னைத்தான் விக்கிரமாதித்தா. எதற்கு இந்தத் தயக்கம்... வேண்டும் வரம் கேள்...!
தாயே... தங்கள் தரிசனத்தைவிடவும் பெரிதாக எதுவுமே எனக்குத் தெரியாததால் எதைக் கேட்பது, அதை எப்படிக் கேட்பது என்று புரியாமல் புழுங்கியபடி உள்ளேன்.
உன்னை நான் பாராட்டுகிறேன். ஆயினும் வாக்கு பிழன்றுவிட்டாள் மாகாளி என்று என்னை நாளை இந்த உலகம் கூறிடக்கூடாது. உன் தீரச் செயலுக்கு ஏற்ற வரத்தை நீ கேட்டே தீரவேண்டும். நான் அதை உனக்கு வழங்குவேன்.
-காளியின் பதிலால் விக்கிரமாதித்தன் கண்ணீர் வடிக்க, பட்டி இதுதான் அருமையான வாய்ப்பு என்று கருதியவனாக காளியைப் பார்த்தவன் அம்மா... எந்த வரம் கேட்டாலும் தந்துவிடுவாயா?
- என்று கேட்டான்.
ஆம்... நீ எந்தப் பொருளைக் கேட்டாலும் சரி. அதை நான் வழங்கிவிடுவேன்.
அப்படியானால் என் அருமைத்தாயே... இந்த பூவுலகின் நிகரில்லாத அரசனாக விக்கிரமாதித்தன் திகழ வேண்டும். விக்கிரமாதித்தன் வரையில் அவனே மன்னன். அவனே சக்கரவர்த்தி... அவனுக்கு கீழேதான் இந்தப் பூவுலகமும் இயங்க வேண்டும்.
பட்டி வரத்தைக் கேட்பது போல விக்கிரமாதித்தனிடம் ஞாபகப்படுத்த மாகாளி விக்கிரமாதித்தனைப் பார்த்தாள்.
விக்கிரமாதித்தனும் தாயே! பட்டியின் விருப்பமே என் விருப்பமும். இந்த உலகை ஒரு குடையின் கீழ் நான் கொண்டுவந்து ஆண்டிட விரும்புகிறேன். அப்படிப்பட்ட என் ராஜ்யத்துக்குள் நீயே எல்லாம். ஒரு வகையில் இந்த பூமியைப்பந்தை அன்னை நீயே என் மூலம் ஆட்சி செய்ய வேண்டும். அதுவே என் வேண்டுகோள்
என்றான்.
அன்னையும் 'தந்தோம்' என்றாள். அப்படியே உன் புகழ் காலகாலத்துக்கும் பேசப்படும்... உன் திறனும் புத்தியும் விவேகமும் எல்லாக் காலங்களிலும் வெளிப்பட்டபடி இருக்கும்.
என்றாள்.
பிறகு தனது சிலைக்குக் கீழ் இருக்கும் நவரத்னதிரவியங்கள் சகலமும் விக்கிரமாதித்தனுக்கே என்றவள் இந்த நவநிதியோடு குபேர நிதி, சங்க நிதி, பதும நிதி, என்று பல நிதிகளை நீ திரட்டப் போகிறாய். உன் வாழ்க்கை புத்தியைக் கொண்டு சிந்தனை செய்யும் மனிதர்களுக்கெல்லாம் ஒரு பாடமாகவும் வழிகாட்டியாகவும் விளங்கிடும்.
- என்றாள். உடனே விக்கிரமாதித்தனும் பட்டியும் மீண்டும் அன்னையை நமஸ்கரித்து எழுந்தனர்.
அன்னையும் அருளிய கரங்களோடு அப்படியே மறைந்தாள்.
விக்கிரமாதித்தன் வெற்றிப் பெருமிதத்தோடு தன் தம்பியும் மதியூகியுமான பட்டியைக் கட்டிக் கொண்டான் தம்பி... உன்னால் எனக்கு இன்று பெரிய வெற்றி. உனக்கு நான் எப்படி நன்றி கூறுவேன்.
- என்று கூறியவாறே பரவசப்பட, பட்டியும் நீ நலமாக, பலமாக இருந்தாலே நானும் இருந்தது போலத்தானே... நீ வேறு நான் வேறா
என்று கேட்க விக்கிரமாதித்தன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
அந்தப் பெரிய ஆலமரத்தின் கீழ் கேட்ட சப்தம் அனைவரையும் அங்கே ஒரு சேர குவித்துவிட்டது.
சப்தத்திற்கான காரணத்தைத் தோண்டிப் பார்த்தபோது ஒரு ஆச்சர்யம் போல ஒரு கல்தாழி. தாழிகளில் கல்தாழி அபூர்வமானது. லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அது மட்டும் கெடாது என்பதுதான் அதன் சிறப்பே!
மளமளவென்று தோண்டி அந்தத் தாழியை வெளியே எடுத்தார்கள். இப்படி தாழி ஏதும் அகப்பட்டால் உள்ளே எலும்புக் கூடுகள்தான் இருக்கும்... ஆனால் இந்த தாழியிலோ வழிய வழிய சுவடிக் கட்டுகள்.
அந்த நள்ளிரவில் ஃபோகஸ் லைட்டின் ஒளியோடு அவைகளை வெளியே எடுத்துப் பார்த்ததில்லை நாயகத்துக்கு கண்களில் நீர் திரையிட்டது.
சஃபாரி சூட் அதிகாரிக்கு பெரிய ஏமாற்றமாகிவிட்டது. 'இதற்காக அந்த இன்ஸ்ட்ரூமென்ட்டுகள் வெடிகுண்டு இருப்பது போல சிக்னல்களைத் தந்தன?' கேள்வியில் விழுந்தார் அவர். ஆனால் தாழியிலோ கொஞ்சம் போல கந்தகத்துகள்கள் இருப்பதுதான் காரணம் என்பது அவருக்கு அந்த நொடியில் புரியவில்லை. தில்லைநாயகம் மளமளவென்று அந்தக் கட்டுகளை எடுத்து பிரித்து பார்த்தார். தில்லைநாயகத்தின் புதல்வனான இளையவள்ளுவன் 'அப்பா, இன்று புதையல் கிடைக்கப் போகிறது' என்று கூறியது ஞாபகத்தில் வந்தது.
அய்யா! உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி. இந்த ராத்திரியில் இப்படி வந்து சோதனைங்கற பேர்ல இப்படி தொந்தரவு பண்றீங்களேன்னு நினைச்சேன். ஆனா அதனாலதான் இந்த ஏடுங்க எனக்கு கிடைச்சிச்சு. இதுங்களை என் முன்னோர்கள்தான் இங்க புதைச்சு வெச்சிருக்கணும். ஒரு தாழியில உடம்பைத்தான் போட்டு புதைப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா ஏடுங்களைப் போட்டு புதைச்சது ஏன்னு தெரியல. இருந்தாலும் சரியான காரணம் நிச்சயம் இதுக்கு இருக்கும். நாளைக்கே அந்தக் காரணத்தைக் கண்டு பிடிச்சிடுவேன்
- என்றவர் அந்தத் தாழியை மகன் இளையவள்ளுவன் உதவியோடு தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். அப்படி ஒன்றும் அது பெரியதாழியும் இல்லை.
தாழி வழிய வழிய ஏடுகள். அதிகாரிகள் அதைப் பிரித்துப் பார்த்தனர். ஆனால் ஒரு சிறு கொசு வந்து அமர்ந்திருப்பது போல பொடிப் பொடியாய் எழுத்துக்கள். அதை எப்படிப் படிப்பது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் தமிழ்தான். கண்களை உருட்டி உருட்டி பார்த்ததுதான் மிச்சம்.
ஏடு படிக்கறதுங்கறது ஒரு வித்தைங்க. இதைப் படிக்க வர்றவங்க தமிழ் மொழியில் இருக்கற ஏதாவது ஒரு நூலையாவது முழுவதுமாக படிச்சி முடிச்சு அதைப்பற்றி பொருளும் சொல்லணும். உதாரணமாக எங்க சாதில வந்த வள்ளுவர் எழுதுன திருக்குறள் அம்புட்டையும் தலை கீழா ஒப்பிச்சி அதுக்கு அர்த்தமும் சொல்லணும். பிறகு சொந்தத்துல ஒரு பாட்டாவது எழுதி குருநாதர்கிட்ட காட்டி ஆசீர்வாதம் வாங்கணும். அதுக்குப் பிறகும் இந்த ஏடு படிக்கறது அவ்வளவு சுலபத்துல வந்துடாது. நாக்கை மடக்கி ஒடிக்கற பாஷை இந்த சித்தருங்க பாஷை... புரிஞ்சுக்குங்க...
-என்றார் தில்லைநாயகம். அவர்களும் சற்றே ஏமாற்றமுடன் அதேசமயம் தங்களுக்கும் ஒருநாள் ஏடு பார்த்து பலன்கூற வேண்டும் என்கிற ரகசிய வேண்டுகோளுடன் விலகிக் கொண்டனர்.
அதன் பிறகு வெளியேதான் சென்ட்ரி காவலுக்கு நின்றது. தில்லைநாயகத்துக்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தவர் அந்த கல்தாழி ஏடுகள் என்ன என்றும் எப்படி என்றும் பார்க்க ஆரம்பித்தார்.
முதல் கட்டை விரித்த நொடி நன்கு பளிச்சென்று தெரிந்தது-அந்த ஏட்டுக்கட்டு எந்த ஜாதியென்று.
'மாமன்னன் விக்கிரமாதித்தன் வரலாறு என்னும் அவனது ஜென்ம விவரங்களுமாகிய உலகின் சக்கரவர்த்தியின் ஏகபோக வரலாற்றையும் அதன் சாரங்களையும் கூறிடும் ஏடுகள்' - என்றது முதல் ஏடு!
தில்லை நாயகம் அடுத்த நொடி எகிறிக் குதித்தார். இளைய வள்ளுவனை அழைத்து எலேய்... இது விக்கிரமாதித்தன் கதையோட - அவனோட இப்போதைய ஜென்மத்தையும், அவன் எங்க எப்படி இருக்காங்கறதையும் சொல்லற ஏட்டுக்கட்டுடா...
அப்படின்னா?
- இளைய வள்ளுவன் புரியாமல் கேட்டான்.
என்ன அப்படின்னா...? விக்கிரமாதித்த மகாராஜாவை உனக்குத் தெரியாது?
யாருப்பா அது?
அடப்பாவி... விக்கிரமாதித்தனைத் தெரியாத ஒருத்தனும் இந்த உலகத்துல இருக்க முடியுமா என்ன...? அதை ஒரு நல்ல கற்பனைக் கதையாதான் நானே இவ்வளவு நாளும் நினைச்சு கிட்டிருந்தேன். ஆன விக்கிரமாதித்த ராஜா இருந்துருக்காரு… அவ இருந்துருக்காருன்னா அவரோட சாகசங்கள் சாமர்த்தியங்களும் உண்மைன்னுதான் தோணுது. அப்படி ஒரு விக்கிரமாதித்தன் பத்தின ஏடு இப்ப ஏன் கிடைச்சிருக்குங்கறதுதான் தெரியலை...!
- தில்லைநாயகம் ஒரு பைத்தியக்காரன் போலதான் பினாத்தினார். வருந்தினார். திரும்பத் திரும்ப ஏட்டுக்கட்டுகளைப் பார்த்தார்.
ஏம்ப்பா... இதை விலாவரியா படிச்சா விளங்கிடா தாப்பா...?
என்றான் இளைய வள்ளுவன் "படிக்காமலே நான் சொல்றேன். இது இப்ப கிடைச்சிருக்குன்னா விக்கிரமாதித்தனும் இந்த