Concrete Manasugal
4/5
()
About this ebook
மனித மனம் மிகவும் மிருதுவானது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள், பிரிவுகள், போராட்டங்கள். அதன் மென்மையை அழித்து இறுகச் செய்து விடுகின்றன. பல்வேறு மனிதர்களின் தன்னம்பிக்கை போராட்டம், என்று பல்வேறு உணர்வுகளோடு யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் இச்சிறுகதைத் தொகுப்பு அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.
Read more from Vidya Subramaniam
Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Concrete Manasugal
Related ebooks
Uravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5Vikrama Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Kanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Gnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam! Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Amirtha Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Kadal Rating: 5 out of 5 stars5/5Penn Ondru Kandean! Rating: 5 out of 5 stars5/5Paravaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Anuradha Ramananin Sirukathaigal Collection - 5 Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Sikamanikal Rating: 0 out of 5 stars0 ratingsIthazhoram Varalama Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsKadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Kalyana Raagam Rating: 5 out of 5 stars5/5Naaloru Poo Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Varaali Rating: 0 out of 5 stars0 ratingsAgni Puthri Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsRadha Madhavam Rating: 0 out of 5 stars0 ratingsThulasithalam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Concrete Manasugal
1 rating0 reviews
Book preview
Concrete Manasugal - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
கான்கிரீட் மனசுகள்
(சிறுகதைகள்)
Concrete Manasugal
(Sirukadhaigal)
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
பொருளடக்கம்
முன்னுரை
என்னுரை
1. கான்கிரீட் மனசுகள்
2. ஒளி
3. ஞானப் பால்
4. சூர்ய புத்ரி
5. பிறவி
6. நெருப்பு
7. கண்ணாமூச்சி
8. அவன் வருவாள்...
9. குளத்தி
10. தேடல்
11. பூமி
12. கல்வெட்டு
13. கதிர்
14. பேரம்
15. சாத்திரம் ஏதுக்கடி?
16. தொப்புள் கொடி
17. கெட்டாலும் மேன்மக்கள்
18. வர்ணங்கள்
19. பிள்ளை மனம்
20. பொய்க்கால் குதிரைகள்
21. மேடை முகங்கள்
22. நர்மதா குட்டி
23. பணப் பார்வை
24. ஏணிகளும், பாம்புகளும்
25. ஆண் மனம்
முன்னுரை
வெ. இறையன்பு I.A.S.
மதுரை
2003
Present Chief Secretary
உயர்த்திப் பிடிப்பவை
வித்யா சுப்ரமணியம் எழுதிய சிறுகதைத் தொகுதிகளை ஏற்கெனவே படித்திருக்கிறேன். இந்தத் தொகுப்பு அவற்றிலிருந்து வித்தியாசமானது.
வெறும் தகவல் சொல்கிற பாணியிலிருந்து (Reporting Format) விலகி தத்துவார்த்தப் பார்வையுடன் இவை எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.
மானுடத்தின் அசிங்கமான பக்கங்களைக்காட்டி ‘இப்படித்தான் நாம் இருக்கிறோம்’ எனச் சுட்டிக்காட்டுவது ஒரு வகை வெளிப்பாடு.
‘இல்லை... இல்லை... நாம் மேன்மையானவர்கள்தான்’ என்று வீடு என்பது கழிவறை மட்டுமல்ல... கமகமக்கும் வரவேற்பறையும்தான் என வெளிச்சம் போடுவது இன்னொரு வகை.
நல்ல மனிதர்களைப் பற்றியும், மனிதநேயம் பற்றியும், மானுடம் பற்றியும் இனிய பக்கங்கள் குறித்தும் தொடர்ந்து படித்தால் நம்மையும் அறியாமல், நாம் இன்னும் மேம்பட்டவர்களாக, கூடுதல் கருணையுடன், அதிக அன்புடன் இருப்போமே! நம்மிடம் இருக்கும் சிலவற்றைத் தொலைக்க முற்படுவோமே!
என்கிற எண்ணம் ஆழ்மனத்தில் விழுந்துவிடும். உயர்ந்தவற்றை சொல்வதற்குத்தான் இலக்கியம். உயர்ந்தவனையும் இன்னும் உயர்த்தவல்லவை தாம் உண்மையான கதைகள். இதைத்தான் செய்ய வித்யா சுப்ரமணியம் முயன்றிருக்கிறார். அதில் அவர் பெறுகிற வெற்றியின் விஸ்தீரணம் நம்முடைய கைகளில்.
மனித மனங்களில் அமுங்கி எழுந்த அடையாளம் தத்துவக் கீற்றுகளாகத் தெறித்து விழுந்திருக்கின்றன.
‘பூமி’ என்கிற கதை - வழக்கமாகச் சித்தரிக்கப்படும் குடும்ப உறவுகளிலிருந்து வேறுபட்ட சூழலை உள்ளடக்கியது. மருமகளே மாமியாருக்காகத் தாலியை அடகு வைக்க முன் வருகிற கரு. இப்படி இருந்தவைதாம் நம் குடும்பங்கள். ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்காகக் கொஞ்சம்கூட வருத்தப்படாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்த வரலாறு நிறைந்ததுதான் பூமி. எழுத்தாளர் இலட்சிய மாந்தர்களை உருவாக்கும் முயற்சியைத்தான் மேற்கொள்ள வேண்டும். பார்த்தவற்றை எழுதுவதல்ல எழுத்து. பார்க்க வேண்டியவற்றைப் படைத்துக் காட்டுவது - மகிழ்ச்சியாயிருந்தது.
‘கதிர்’ என்ற கதையும் வெளிச்சக்கதிராய் வேலையற்றவர்களுக்குத் திகழ்கிறது. வேளாண்மை என்னும் மண்ணுக்கு மருதாணி தடவும் தொழிலை நேசிக்கிறபோதுதான் நம்முடைய நாட்டின் முதுகெலும்பில் உள்ள கூன் நிமிரும்.
‘ஞானப்பால்’ என்கிற சிறுகதையில் மகனைப் பறிகொடுத்த தந்தையின் தவிப்பும் ராகிங் கொடுமையும் பின்புலமாக உள்ளது.
எந்தத் தாயும், தகப்பனும் தவறு செய்வதற்காகப் பிள்ளைகளைப் பெறுவதில்லை. எந்தக் குழந்தையும் பிறக்கும்போது பட்டங்களுடன் பிறப்பதில்லை...
வரிகள் யோசிக்க வைப்பவை.
உன் படிப்பும், பயிற்சியும் முடிந்ததும் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று உன் மருத்துவப் பணியைத் துவங்க வேண்டும். என் மகன் இருந்திருந்தால் தன் ஆயுட்காலம் முடிய எத்தனை உயிர்களைக் காப்பாற்றியிருப்பானோ, அத்தனையையும் உன் கணக்கில் சேர்த்துக்கொண்டு உயிர் காக்கும் சேவையில் உன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். செய்வாயா?
என்று திருஞானசம்பந்தம் கூறும் பிராயச்சித்தம் தியானிக்க வைப்பவை.
நவீன ஓவியத்தைப்பற்றிய இவர் கண்ணோட்டம் (வர்ணங்கள்) எனக்கு மாறுபட்டது என்றாலும் அக்கதையின் திருப்பங்கள் ‘பௌன்சர்களாக’ இருக்கின்றன. கலை என்பது வரையறை தாண்டியது என்பதையும், கல்லையும் கசிய வைப்பது என்பதையும் உணர்த்துகிற கதை.
‘கண்ணாமூச்சி’ சுயக்குறிப்புள்ள சிறுகதை. வித்யா சுப்ரமணியத்தைத் தெரிந்தவர்களுக்கு அது இன்னும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். தன் சொந்தத்தாக்கம் இல்லாமல் சுயகதையை எழுதுவது சிரமம். அந்தக் கயிற்றின்மேல் நடக்கும் வித்தை அவர் எளிதில் நிகழ்த்தியிருக்கிறார்.
நல்லா இருக்கற உடம்பைக் கெட்டபழக்கங்களால் கெடுத்துக்கறதுகூட தற்கொலை மாதிரிதான் புரிஞ்சுதா.
புருஷன் பிரிந்து செல்ல, பயம் புருஷனாயிற்று.
எங்களுக்கு டென்ஷன் இல்லையா? இப்போ எனக்கேற்பட்டிருக்கிற டென்ஷனுக்கு நானும் நாலு பாக்கெட் பிடிக்கவா...?
உதட்டில் உட்கார்ந்துகொண்டிருந்த நெருப்பு முழு உடம்பையும் ஸ்வீகரித்துக்கொண்டது.
மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை. அந்த மரணம் நல்லபடி நிகழ வேண்டுமே என்ற பயம்தான் என்னைக் குடைந்திருக்கிறது.
போன்ற வரிகள் அழுத்தமாய் வந்து விழுந்திருக்கின்றன.
எல்லா இயற்கைச் சீற்றங்களும் ஏழைகளுக்கு மட்டுமே இடையூறு செய்பவையல்ல. பணம் படைத்தவர்களுக்கும் நிலநடுக்கம் உண்டு என்பது ‘கான்கிரீட் மனசுகள்’ இடிந்து விழுகிற கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த வாழ்க்கையை நுகர இத்தனை கெடுபிடிகள் என்ற இருண்மயப் பார்வை (Mystical Question) மூள்கிறது.
‘பிறவி’ மலம் அள்ளுபவர்கள் அவஸ்தைகளைக் குறித்த யதார்த்த கதை. இன்னமும் மனிதக் கழிவுகளைத் தலையில் சுமக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மானுடத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த எச்சில். இல்லையா? இந்தக் கொடுமையை ஒழிக்கும் திட்டங்களில் மேற்குவங்காளமே இந்தியாவிற்குக் கிழக்குத் திசையைக் காட்டியிருப்பதற்குச் சித்தாந்தமும் காரணம். அங்குதான் நிலசீர்த்திருத்தமும் முறையாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
பிறவியில் வரும் கிராமம் எனக்கு ‘காந்தபுரா’வை நினைவுபடுத்துகிறது. இந்த நிமிஷம் நீயும்தான் உள்ள வெச்சுக்கிட்டு அவதிப்படற
என்பது மும்மலங்களுக்கும்கூட பொருந்துவதாக இருக்கின்றது.
‘ஒளி’ தீபா‘வலி’ பற்றியது. தாமரை ‘உங்க பொண்ணு எந்த பட்டாசுக் கம்பெனியில வேலை பார்க்குது?’ என்று கேட்கிற கேள்வி எனக்கு தோடர்கள் ‘இங்கிலாந்து ராணியிடம் எத்தனை எருமை மாடுகள் இருக்கின்றன?’ என்று கேட்ட கேள்வியை நினைவுபடுத்தியது. எவ்வளவு பெரிய சோகம்!
பட்டாசுகளை வெடிக்க மறுத்து எங்களுக்கு இந்த வெளிச்சம் வேண்டாம்
என்று சொல்கிற பதில் கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. அந்த வெளிச்சம் பலரது விழிகளைப் பிடுங்கியது என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை.
பெரிதாக ‘தேடல்’ இன்னொரு இலட்சியக் கதை. நான் என்ன சாதி?
என்று கேட்டு அடுக்கடுக்காக எழுதப்படுகிற கேள்விகள் நியாயமானவை, சுட்டெரிப்பவை.
தொகுப்பு முழுமையும் நம்மை உயர்த்திப் பிடிக்கிற கதைகள். இன்னும் உயரமான இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறவை. மானுடத்தின் அழுக்குப்படாத அழகு நிறைந்த பக்கங்களை அடையாளம் காட்டுபவை.
உயரப் பறக்கச் சொல்லித் தருபவை. ‘உலகம் அழகாக இருக்கிறது. இன்னும் அதில் வாசமுள்ள மலர்களும் வாழ்கின்றன’ என்கிற நம்பிக்கையை அவை கற்றுத்தருகின்றன.
வெ. இறையன்பு
என்னுரை
இனிய நட்புக்கு,
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். சிலருக்கு அது சப்பர மஞ்சம். சிலருக்கோ அது முட்படுக்கை. இன்னும் சிலருக்கு அலையடிக்கும் ஆழ்கடல். அந்த ஆழ்கடலின் விசித்திரங்கள் என்னை மூச்சடைக்க வைத்திருக்கின்றன. அதன் அலைகளும் ஆழங்களும் புரியாமல் திகைப்படைந்திருக்கிறேன்.
சில நேரம் அது என்னைக் கரையின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. இன்னும் சில நேரம் அடியோடு புரட்டிப்போட்டு ஆழத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. என் காலடி மண்ணை காணாமலடித்திருக்கிறது. இனி அவ்வளவுதான் என்று நினைக்கும் நேரத்தில் என் கைகளில் வலம்புரிச் சங்குகளையும் முத்துக்களையும் அள்ளிக் கொடுத்துப் புன்னகைத்திருக்கிறது. அதன் அலைக்கழிப்பில் நான் எத்தனையோ பெற்றிருக்கிறேன். எதை எதையோ நழுவவிட்டிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் நான் நழுவவிடாத பொருள் ஒன்று உண்டு. அதுதான் என் பேனா.
என்னோடு எப்போதுமே இருந்திருக்கிறது அது. நான் முழுகும்போதும், மிதக்கும்போதும், நீந்தும்போதும், கரையில் ஒதுங்கும்போதும் என் தடங்களை அது எழுத்துக்களால் நிறைத்திருக்கிறது. நான் மூச்சு திணறும்போதும் அது உயிரோடு இருந்திருக்கிறது. இன்றுவரை அது தன் சிருஷ்டியை நிறுத்தவில்லை. சக மனிதர்களின் உணர்வுகளையும், வாழ்க்கையையும், போராட்டங்களையும் இத்தொகுப்பில் அது பதிவு செய்திருக்கிறது. அலைகளின் அலைக்கழிப்பில் சில வெகுமதிகள் எனக்குக் கிடைத்ததென்று சொன்னேனே, அவற்றில் ஒன்றுதான் திரு. இறையன்புவின் நட்பு. விலைமதிப்பற்றதாக நான் கருதுவது. அன்பு, அறிவு, அமைதி, எளிமை, பதவி இந்த ஐங்குணங்களும் மிக அபூர்வமாகத்தான் மனிதர்களிடம் ஒன்று சேரும். இவற்றோடு இவரிடம் கூடுதலாக இருப்பது ஏழாவது அறிவு. அந்த அறிவினால் பல மனிதர்களை செப்பனிட்டுக் கொண்டிருப்பவர். அத்தகையவர் இத்தொகுப்பிலிருக்கும் கதைகளை சீர்தூக்கிப் பார்த்துத் தனது கருத்துக்களை அணிந்துரையாக்கியிருப்பது என் பேனா செய்த பாக்கியம்.
தமிழின் தரம் பார்க்க பொற்றாமரைக் குளத்தின் சங்கப் பலகையில் வைப்பார்களாம். எனது சங்கப் பலகையும் மதுரையில்தான் இருக்கிறது. அதற்கு என் அன்பு கலந்த நன்றி.
இது எனது ஆறாவது சிறுகதைத் தொகுப்பு, எழுபதாவது புத்தகம். இச்சிறுகதைத் தொகுப்பை எனது கணவர் திரு. பி.வி. சுப்ரமணியத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்
வித்யா சுப்ரமணியம்
1. கான்கிரீட் மனசுகள்
சேட்ஜி கொஞ்சம் மனது வையுங்கள். கடவுள் கருணை மிக்கவன். அதனால்தான் உங்களிடம் அளவற்ற செல்வத்தையளித்து உங்களை என் முதலாளியாகவும், உங்கள் கைகளால் அவ்வப்போது சின்னச் சின்ன உதவிகள் பெறும்படியாக என்னை உங்கள் வீட்டு வேலைக்காரனாகவும் படைத்திருக்கிறான். நீங்கள் உதவாமல் எனக்கு வேறு யார் உதவுவார்கள்?
ராம்லால் தன் முதுகு வளைத்து தீனமாகக் கெஞ்சினான்.
நிர்மல் ராஜ் பாலைவனத்துச் சூரியன்போல பார்வையால் அவனைச் சுட்டெரித்தார்.
ஏற்கனவே நீ வாங்கிய நூறு இருநூறு ரூபாய் கடன்கள் வளர்ந்து வளர்ந்து இரண்டாயிரமாகி நிற்கிறது. இதோ அதோ என்கிறாயே தவிர அடைக்கும் வழியாக இல்லை. உன் சம்பளத்திலும் குறைக்க விடமாட்டேன் என்கிறாய். ஒன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாய் அல்லது அழகாய்ப் புகழ்ந்து என்னை மூளைச் சலவை செய்து விடுகிறாய். இம்முறை உன் புகழ்ச்சிக்கு மயங்குவதாக இல்லை. நீ உன்னைக் கத்தியால் அறுத்துக் கொண்டாலும் சரி உன் முழுச் சம்பளமும் பிடித்துக் கொண்டாயிற்று. என்னைத் தொந்தரவு செய்யாமல் மரியாதையாகப் போய்விடு சொல்லி விட்டேன்.
இல்லை சேட்ஜி. அப்படிச் சொல்லக் கூடாது. உங்களுக்காக நாயாக உழைக்கிறேன். மொத்தச் சம்பளமும் இப்படிப் பிடித்துக் கொண்டால் என் வீடு என்ன செய்யும்? ஆறு ஜீவன்கள் என் குடிசையில் பசியோடு காத்திருக்கும். நாங்கள் தினமும் உண்பதே கால் வயிறுக்குதான். அதையும் நிறுத்திவிடாதீர்கள். தயவுசெய்து சம்பளம் கொடுத்து உதவுங்கள் சேட்ஜி.
என் உயிரை எடுக்காதே ராம்லால்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் முதலாளி. என் உழைப்புக்கேற்ற ஊதியமாக இன்னும் இருநூறு ரூபாய் சேர்த்துக் கொடுத்திருந்தால் எப்போதோ இந்தக் கடன் அடைந்திருக்கக் கூடும். பதினைந்து வருட காலமாக இந்த வீட்டில் அசுரத்தனமாய் வேலை செய்யும் எனக்கு நீங்கள் கொடுப்பது வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே. நீங்கள் நியாயமான ஊதியம் வழங்கி இருந்தால் நான் ஏன் கடன் வாங்கப் போகிறேன்?
என்னடா சொன்னாய் வேலைக்காரப் பதரே? யாரிடம் பேசுகிறாய் நீ? வாங்கின கடனை அடைக்க வக்கில்லை! என்னையே குற்றம் சொல்கிறாயா? தொலைத்துவிடுவேன் ராஸ்கல்! வேறு பிழைப்பில்லாமல் வருஷத்திற்கு ஒரு பிள்ளை பெற்றுக் கொண்டால் வாங்கும் சம்பளம் எப்படியடா போதும்? வதவதவென்று பூனை குட்டி போட்டாற்போல பெற்றுத் தள்ளிவிட்டு, இதில் என்னைக் குற்றம் சொல்கிறாயாக்கும்!
என்ன திமிர் உனக்கு! இந்தத் திமிருக்கே உனக்கு ஒற்றை ரூபாய் தரமாட்டேன். கடன் அடையும் வரை நீ எங்கும் செல்லவும் முடியாது. கடன் பத்திரத்தில் கை நாட்டுப் போட்டுத் தந்திருக்கிறாய். போ… போய் வேலையைப் பாரு. உன் கடன் மூவாயிரத்திற்கு வந்து விட்டது. முதலில் அதனை அடை. அதன்பிறகு உன்னை விடுவிக்கிறேன். அப்புறம் எங்கு வேண்டுமானாலும் சென்று தொலை!
சேட் அடிக்குரலில் உறுமினார்.
கொஞ்சம் கருணை காட்டுங்கள் சேட்ஜி அரைச் சம்பளமாவது கொடுங்கள், அல்லது ஊதியமாவது அதிகம் கொடுத்து உதவுங்கள். காலையிலிருந்து மாலை வரை கடுமையாக உழைக்கிறேன். இந்த உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்குங்கள். ஊதியமும் உயர்த்தாமல், கொடுக்கிற ஊதியத்தையும் பிடித்துக் கொண்டால் நான் என்ன செய்வேன். எப்படி என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்?
ஒரு வழி சொல்லட்டுமா?
என்ன…?
உன் மனைவியையும் மகனையும் என்னிடமே வேலைக்கனுப்பு. அவர்கள் வேலைக்கு நான் தரும் ஊதியத்தில் உன் கடன் அடைந்துவிடும்.
வேண்டாம். என் மகன் படிக்கிறான். என் மனைவி நோயாளி.
இதுதான் உன் முடிவென்றால் அவதிப்படு. உனக்கு ஊதியம் கிடையாது.
அப்படியானால் இன்னும் பத்து மாதத்திற்கு முழுச் சம்பளமும் பிடித்துக் கொள்ளப் போகிறீர்களா? ஐயோ சேட்ஜி, என்ன நியாயமிது? என் குடும்பம் பட்டினி கிடந்து செத்துவிடும்.
சாகட்டுமே. என்னை நம்பியா பிள்ளை பெற்றாய்? மான ரோஷமிருந்தால் கடனை எப்படியாவது அடைத்திருப்பாய். ஆனால் உனக்கெங்கே.?
சேட் கிளம்பிப் போய்விட்டார். ராம்லால் மரம் மாதிரி நின்றான்! ‘இதற்குமேல் யாரால் கெஞ்ச முடியும்? இந்தப் பதினைந்து வருடத்தில் ஏதேனும் சுயதொழில் செய்திருந்தால் இந்நேரம் சொந்தமாய் ஒரு குடிசைகூட வாங்கியிருக்கலாம். இந்த ராட்சஸனிடம் வேலைக்குச் சேர்ந்தது எவ்வளவு பெரிய தவறு. குறைந்த ஊதியத்திற்கு அவனது உழைப்பைச் சுரண்டியதுமின்றி அவனைக் கடன்காரனாகவும் ஆக்கி… கிட்டத்தட்ட இப்போது அவன் கொத்தடிமை போல்தான். கடவுளே இந்த நரகத்திலிருந்து எனக்கு விடுதலையே இல்லையா? உன் படைப்பில் ஏன் மனிதர்களுக்குள் குணத்திலும் பணத்திலும் இத்தனை வேறுபாடுகள்? ஒன்று எல்லோரையும் செல்வந்தர்களாகப் படைத்திருக்க வேண்டும், அல்லது நல்லவர்களாகவாவது படைத்திருக்க வேண்டும். இப்படி ராட்சஸர்களைப் பணக்காரராகப் படைத்து என் போன்றவர்களைக் கஷ்டத்தில் மிதக்கவிட்டிருப்பது என்ன நியாயம்? இன்னும் பத்து மாதம் ஊதியமின்றி எப்படி வாழ்வேன்? என் குழந்தைகள் பசியில் சாக வேண்டும் என்பதுதான் விதியா? பரம்பரை பரம்பரையாய் நாங்கள் கைநாட்டுப் போடும் கொத்தடிமைகளாகவே இருக்க வேண்டுமா?’
ராம்லால் சோர்வாடு அன்றையப் பணிகளைச் செய்யத் துவங்கினான்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது தளம் முழுக்க நிர்மல் ராஜ் சேட்டுடையது. ஐயாயிரம் சதுர அடியில் சகல வசதிகளையும் செய்து கொண்டிருந்தார். உள்ளே நுழைந்தால் அரண்மனைக்குள் நுழைந்து விட்டாற்போல் தோன்றும். பணம்… பணம்… எங்கு நோக்கினும் அதன் ஆட்சிதான். சேட்டுக்குப் பல தொழில்கள். நிமிடத்திற்கு லட்ச ரூபாய் பார்க்கும் கோடீஸ்வரர்.
பணமிருக்குமிடத்தில் குணமிருக்காது என்ற வார்த்தையை நூற்றுக்கு நூறு நிரூபிக்கும் கலியுக ராட்சஸன். அதனால்தான் கோடிக்கணக்கில் பணமிருந்தும், ஒரு வேலைக்காரனுக்கு வெறும் முன்னூறு ரூபாய் கொடுத்து அவனைச் சக்கையாய்ப் பிழிந்து கொண்டிருக்கிறார். ராம்லால் பரம சாது. நம்பிக்கையானவன். அவன் வந்தபின் ஒரு குண்டூசிகூட அந்த வீட்டில் காணாமல் போனதில்லை. அவனது அந்த நேர்மைதான் அவர் அவனைக் கொத்தடிமையாக்கியதற்குக் காரணமே. அவன் கடைசிவரை தன்னிடமே வேலை செய்துகொண்டிருக்க வேண்டுமானால் அவனைக் கடன் எனும் சிறையில் அடைத்தால்தான் முடியும். அவர் அவனைக் கடன்காரனாக்கினார். அவ்வப்போது காய்ந்த ரொட்டிகளையும், புளித்த ஜிலேபிகளையும் கொடுத்துக் குளிர வைப்பார். அவன் வீட்டில் அவை தேவாம்ருதம். அவர் கணக்கு தப்பவில்லை. அவன் கடன் சங்கிலியில் சிக்கினான். அவர் தன் காலருகிலேயே அவனைக் கட்டிப்போட்டு விட்டார்.
ராம்லால் பெருமூச்சு விட்டான். மொத்த வீட்டையும் சுத்தப்படுத்தி, பாத்ரூம் கழுவி, துணி துவைத்து பெட்டி போட்டு, கடை கண்ணிகளுக்குப் போய் வந்து, ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு, மெத்தை, தலையணை, திண்டுகளுக்கு உறை மாற்றி, இன்னும் நிறைய நிறைய வேலை செய்து களைத்துப் போனான். நடுவில் ஒரு கோப்பை டீயும் இரண்டு ரொட்டித் துண்டுகளும் கிடைத்தது. டீயை மட்டும் குடித்துவிட்டு ரொட்டியைக் குழந்தைகளுக்காக பத்திரப்படுத்திக் கொண்டான். சூரியன் மறையும் நேரம் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பினான். ஒரு செக்யூரிட்டி வந்து உடுப்புகளைத் தடவி சோதித்தான். தினமும் நடக்கும் சோதனை இது.
கையிலென்ன…?
மதியம் எனக்குச் சாப்பிடக் கொடுத்த ரொட்டித் துண்டுகள். பார்த்துக்கொள்.
ராம்லால் பொட்டலத்தை சற்றே பிரிக்க ரொட்டிகள் தெரிந்தன.
சரி சரி போ.
ராம்லால் லிப்ட்டில் நுழைந்து கீழே வந்தான். "மனைவியையும் மூத்த மகனையும் வேலைக்கு அனுப்பினால் இந்தக் கடன் அடைந்துவிடக்கூடும். ஆனால் வேண்டாம். அவனோடு போகட்டும் இந்த அடிமைப் பிழைப்பு. ஆனால் பணத்திற்கு