Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dharmayutham
Dharmayutham
Dharmayutham
Ebook316 pages2 hours

Dharmayutham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Yandamoori Veerendranath, is a famous Telugu novelist. He had written many social, fiction, super natural thriller stories and novels. Hailing from Andhra Pradesh state in India, he influenced younger generations with his socially relevant writings. In his writings he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and the popular styles of literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545573
Dharmayutham

Read more from Yandamoori Veerendranath

Related to Dharmayutham

Related ebooks

Reviews for Dharmayutham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dharmayutham - Yandamoori Veerendranath

    http://www.pustaka.co.in

    தர்ம யுத்தம்

    Dharma Yutham

    Author:

    எண்டமூரி வீரேந்திரநாத்

    Yandamoori Veerendranath

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முன்னுரை

    திரு எண்டமூரி வீரேந்திரநாத் அவர்கள் எழுதிய ரக்த சிந்தூரம் என்ற நாவல் தமிழில் தர்மயுத்தம் என்ற தலைப்பில் வாசகர்களுக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ளது. மூலக்கதையில் வாசத்தை தமிழிலும் வாசகர்களால் உணரமுடியும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டிருக்கும் எண்டமூரியின் வாசகர்களுக்கு எனது நன்றி.

    கௌரி கிருபானந்தன்

    tkgowri@gmail.com

    சென்னை 78

    1

    ஜெயில் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

    முக்கியமாக அந்த ஜெயில்!

    சுமார் பதினைந்தடி உயரமான சுவர்கள். அதற்கும் மேல் மின்சார ஒயரிங்குகள். தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு கோட்டையைப் போல் காட்சி தரும். மூன்று பக்கங்களிலும் ஆழமான அகழிகள், மதில் சுவற்றின் மீது துப்பாக்கிகளுடன் காவலர்கள். எங்கோ தொலைவாக நிறுவப்பட்ட ராணுவ முகாம் போல் இருக்கும். கடந்த ஐந்து வருடங்களாக நான் அங்கே பணி புரிந்து வருகிறேன்...

    சப் ஜெயிலராக!

    அதற்கு முன்பிருந்தே அந்த ஜெயில் எனக்குத் தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக, அதாவது இருபது ஆண்டுகளாக அந்த ஜெயில் சுற்றுச் சூழலுடன் எனக்கு அறிமுகம் இருந்தது. என் தாய் அங்கேதான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆரம்பநாட்களில் ஸ்வீப்பராக இருந்தாள். பிறகு நாளடைவில் பெண்களின் வார்ட்டுக்கு கேர் டேக்கர் ஆனாள்.

    எங்கள் வீடு ஜெயிலுக்கு வெளியே இருந்தது. அந்த இடத்திலேயே விளையாடிக் கொண்டிருப்போம். அவ்வப்பொழுது கைதிகள் வெளியே வருவார்கள். அவர்களைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். தரையில் இருக்கும் கோலிக்குண்டுகளை எடுத்து ஜேபியில் வைத்துக் கொண்டு வேகமாக ஓடிப் போய் தொலைவில் நிற்போம். அவர்கள் நிசப்தமாக நடந்து சென்று வேனுக்குள் ஏறுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். வேன் புறப்பட்டுச் சென்றுவிடும்.

    அம்மாவுக்கு அந்த நாட்களில் எண்பது ரூபாய்தான் சம்பளம். ஆனால் பணத்தட்டுபாடு இருப்பது போல் அம்மா ஒருநாளும் என்னிடம் காட்டிக் கொண்டது இல்லை. கஷ்டங்களை பற்களுக்கிடையே மறைத்து வைத்தபடி எப்போதும் இதழ்களில் முறுவல் மாறாமல் தோற்றமளிப்பாள்.

    அம்மாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். யாருக்குத்தான் அம்மாவைப் பிடிக்காமல் இருக்கும்?

    என் நண்பர்களின் அம்மாக்களை பலபேரை நான் அறிவேன். அவர்கள் வீட்டிற்கு எப்பொழுது போனாலும் முறுவலுடன் குசலம் விசாரிப்பார்கள். ஆனால் பணம் இருந்து, வாழ்க்கை ஒரு பிரச்னையாக இல்லாத பட்சத்தில், அன்பு ஓரளவிற்கு தானாகவே வந்து விடும் என்பது என் எண்ணம். கடைக்குப் போய் புடவைகள் வாங்கி வரும்போது மறக்காமல் மகனுக்குச் சாக்லேட்டுகள் வாங்குவது, பிறந்த நாளுக்கு புத்தாடைகள் வாங்குவது... இவைதான் அன்பிற்கு எடுத்துக்காட்டு என்றால் நிறையபேர் அவற்றைத்தான் காட்டிக் கொண்டு வருகிறார்கள் என்று தோன்றும்.

    அம்மா அப்படி இல்லை. ஜெயில் அதிகாரி வீட்டில் பற்றுப் பாத்திரம் தேய்ப்பாள். சூபரின்டெண்ட் வீட்டில் துணி துவைப்பாள். காலையிலிருந்து மாலை வரையிலும் இயந்திரமாக பாடுபடுவாள்.

    நான் சிறு வயதில் ஒரு கதை படித்திருக்கிறேன். ஜெர்மனியில் யுத்தம் வந்து ஒரு கிராமம் நிர்மூலம் ஆகிவிடுகிறது. குடும்பங்கள் காற்றில் சிதறிய எச்சில் இலைகளைப் போல் நாலா பக்கமும் பிரிந்து கொண்டிருந்தன. ஒரு தந்தையும், மகனும் தென் திசையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருப்பார்கள். கொஞ்ச தூரம் பயணம் செய்வதற்குள் இருவரும் சாவை நெருங்கி விடுகிறார்கள். நாக்கு உலர்ந்து விடுகிறது. அந்த சமயத்தில் தந்தைக்கு அந்த மைதானத்தில் இறப்பதற்குத் தயாராக, பிணங்களைப் போல் விழுந்து கிடந்த மற்றொரு குடும்பம் கண்ணில் படுகிறது. அவர்களிடமிருந்து தண்ணீர் பாட்டிலை இருட்டில் திருடுகிறான். ஆனால் அதில் ஒரு வாய் தண்ணீர் மட்டுமே இருந்தது. தண்ணீர் தொண்டையில் இறங்கவில்லை என்றால் உயிர் போகும் நிலை. மகனின் நிலைமையும் அதேதான். தந்தை பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு பயணத்தை மேற்கொள்கிறான்.

    இதுதான் கதை.

    இந்தக் கதையை நான் பலபேரிடம் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் என்னை வேடிக்கையாக பார்த்தார்கள். அப்படி ஒரு நாளும் நடக்காது என்பார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை. இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பலமுறை மனதிலேயே உருப் போட்டுக் கொண்டிருந்தேன். கோபாலின் அறிமுகமும், அந்த சம்பவமும் நிகழ்ந்த பிறகு என் அபிப்பிராயம் மேலும் வலுவடைந்தது.

    எங்களுடைய ஜெயில் ஊருக்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் காடு போன்ற புதற்களுக்கு நடுவில் இருந்தது. அதனால் என் பட்டப் படிப்பின் போது ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அங்கேதான் கோபால் அறிமுகமானான். ரொம்ப புத்திசாலியான மாணவன். எனக்கும் முதல் வகுப்பு கிடைத்தது. இருவரும் மேற்படிப்பு படிக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தோம்.

    அம்மாவிடம் சொன்னபோது அதற்கென்ன வந்தது? என்றாள் முறுவலுடன்.

    அதற்குள் அந்த கொடுமையான செய்தி எட்டியது, கோபால் தற்கொலை செய்து கொண்டு விட்டான் என்று. காரணம் ரொம்ப சிறியது என்றார்கள் கேள்விப்பட்டவர்கள். கோபால் வீட்டில் கூடப் பிறந்தவர்கள் இரண்டுபேர். தம்பிகள் இருவரும் சிறியவர்கள். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். தந்தை ஏதோ ஆபீசில் ஹெட் கிளார்க்.

    ஏற்கனவே வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி எங்கள் ஆசைகளை எல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு உன்னை இவ்வளவு தூரம் படிக்க வைத்தோம். இனியும் தொடர முடியாது. உனக்குப் பின்னால் இன்னும் இரண்டு பேர் இருக்கிறர்கள் என்றாள் அவன் தாய். எல்லோரும் நினைத்தாற்போலவே அவன் சாகும் அளவுக்கு பெரிய காரணம் இல்லை இது. ஆனால் அவனுக்கு படிப்பில் மேல் எவ்வளவு ஆர்வம் இருந்தது என்று எனக்குத் தெரியும். இந்த வார்த்தைகளுக்கு அவன் எவ்வளவு ஆடிப் போயிருப்பானோ என்னால் ஊகித்துக் கொள்ள முடியும். கோபால் போன்றவன் எனக்கு மகனாக இருந்திருந்தால் (வேடிக்கையான எண்ணம்தான்) பிச்சை எடுத்தாவது அவனை படிக்க வைத்திருப்பேன். கோபாலின் தற்கொலைக்குக் காரணம் தன்னுடைய படிப்பு நின்று விட்டதே என்பது அல்ல. தன் புத்திசாலித்தனத்தை, படிப்பின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை தாய் தந்தை புரிந்து கொள்ளவில்லையே என்பதுதான்.நிறைய பேருக்கு அது அற்பக் காரணமாகத் தோன்றலாம். ஆனால் புரிந்துகொள்ளக் கூடியவர்களுக்கு அதைவிட பெரிய காரணம் வேறு இருக்க முடியாது. அவனுடைய தாய் இன்னும் கொஞ்சம் கவனமாக அவனுக்கு வீட்டின் நிலைமையை விளக்கியிருந்தால் ஒருக்கால் இப்படி நேர்ந்திருக்காதோ என்னவோ.

    அம்மாவிடம் போய் வேலையில் சேரப் போவதாக சொல்லி விட்டேன். அம்மா வியப்படைந்தாள்.

    ஏன்? மேலே படிக்கப் போவதில்லையா? என்று கேட்டாள்.

    ஊஹூம். போர் அடிக்கிறதம்மா.

    அம்மா கெட்டிக்காரி. சிரித்துவிட்டாள். நான் கஷ்டப்படப் போகிறேன் என்றுதானே இப்படிச் சொல்கிறாய்? என்றாள்.

    அம்மாவின் சுற்றிலும் கைகளைப் பிணைத்து மடியில் முகம் புதைத்துக் கொண்டேன். மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. எவ்வளவு முட்டாள் நான்? இந்த வயதில் இன்னும் உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற யோசனை கூட வரவில்லை எனக்கு.

    அம்மா மேலும் வாதாடப் போனாள். நான் கேட்டுக் கொள்ள வில்லை.

    அதன் விளைவுதான் இந்த வேலை.

    வேலை கிடைத்த பிறகு நான் ரொம்பவும் மாறிப் போய்விட்டதாக அம்மா அடிக்கடி சொல்லி வந்தாள்.

    உண்மைதான். அந்த ஜெயில் அப்படிப்பட்டது. அங்கிருந்த ஒவ்வொருவருமே எத்தனையோ கொலைகளை செய்தவர்கள். திரும்பவும் வெளியுலகிற்குப் போனால் ரத்தத்தைக் குடிக்கத் துடிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் எவ்வளவு கடினமாக இருக்கிறேனோ அவ்வளவு நல்லது. அரக்கத்தனத்தை ஒடுக்கவல்லது அரக்கத்தனம்தான்.

    வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குள்ளேயே கண்டிப்பான அதிகாரி என்று பெயர் வந்துவிட்டது.

    எவ்வளவு பெரிய கொள்ளைக்காரனாக இருந்தாலும் என்னைப் பார்த்து பயந்து ஒதுங்கிப் போய் விடுவார்கள். எனக்குக் கீழே இருக்கும் ஜவான்கள் கூட மறைமுகமாக என்னைப் பாராட்டுவது எனக்குத் தெரியும். இந்த திருட்டுத் தடியன்களை அடக்குவதற்கு இப்படிப்பட்ட அதிகாரிதான் வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வந்தார்கள்.

    ஒவ்வொரு சம்பவத்தின் பாதிப்பு மனிதன் மீது நிறைய இருக்கும். சம்பவம் சிறியதாகவே இருக்கலாம். ஆனால் அப்போதைய மனிதனின் நிலையைப் பொறுத்து அவன் பாதிப்பு இருக்கும். கோபால் மரணம் என்மீது அப்படிப்பட்ட பாதிப்பைதான் ஏற்படுத்தியது. அதற்குத் துணையாக சிறுவயதில் நான் படித்த கதை. இந்த இரண்டும் சேர்ந்து எனக்கு மனிதப் பண்பின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டன. அதற்குப் பிறகு ஜெயில் இருந்த கிராதகர்கள் என் நம்பிக்கை மேலும் வலுவடையச் செய்து விட்டார்கள். இவற்றை எல்லாம் ஆதாரமாகக் கொண்டு நான் சில கொள்கைகளை வகுத்துக் கொண்டேன். முதலாவது மனிதன் சுயநலவாதி. எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் தனக்குப் பிறகுதான். இரண்டு ..... ஒவ்வொரு மனிதனிடமும் அரக்கத்தனம் குடிகொண்டிருக்கும். அது வெளிப்பட்டுவிட்டால் அவன் ஜெயிலில் இருப்பான். அது உள்ளே இருக்கும் வரையில் அவன் வெளியே இருப்பான்.

    அப்படிப்பட்ட அரக்கர்களுடன் தினந்தோறும் பழக வேண்டிய வேலை என்னுடையது. அதனால்தான் ஜெயில் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    2

    பிப்டி ஒன்..

    ப்ரசண்ட் சார்.

    பிப்டி டு...

    தோலை உரித்து விடுவேண்டா பயலே.

    அடெண்டென்ஸ் எடுத்துக் கொண்டிருந்த சிவபிரசாத் திடுக்கிட்டு யாருடா அது? என்றான்.

    நான் இல்லை சார்.... யெஸ் சார்

    கொல்லென்று சிரிப்பு. சிவபிரசாதின் முகம் சிவந்தது. சுதாரித்துக் கொண்டு மறுபடியும் தொடங்கினான்.

    பிப்டி த்ரீ

    இங்கே இருக்கேன் சார்.

    தொலைவிலிருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் அடெண்டென்ஸ் எடுத்தால் இதுபோல் ரகளை செய்ய மாட்டார்கள். சிவபிரசாத் கொஞ்சம் சாது. இவர்களுக்கு லாயக்கு இல்லாதவன்.

    வெயில் சுளீரென்று கைதிகளின் மேல் பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தனும் தடியன்களாக இருந்தார்கள். இந்தியாவில் வேறு எந்த ஜெயிலிலும் கட்டி மேய்க்க முடியாத போது பொறுக்கி எடுத்து இங்கே அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    வலதுபக்கத்து வரிசையில் முதலாவதாக நின்று கொண்டிருந்தவன் சாமி. ஆறு கொலைகளை செயதிருக்கிறான். பெங்களூர் ஜெயிலில் போட்டபோது இரண்டு முறை தப்பித்துக் கொண்டு விட்டான். ஒரு முறை தப்பித்துக் கொண்ட போது பன்னிரெண்டு வயது சிறுமியைக் கற்பழித்துவிட்டு மறுபடியும் பிடிபட்டுவிட்டான். அவன் ஆர் வார்ட்டிற்கு தாதா.

    அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருப்பவன் சண்முகம். மதக் கலவரங்கள் எழும்பிய நேரத்தில் அவன் கையில் சிறிய ஸ்பிரிங் கத்தியை வைத்துக் கொண்டு நடைபாதையில் போய்க் கொண்டே எதிரே வந்தவனின் வயிற்றில் குத்தி சுழற்றி குடலை வெளியே இழுத்து விடுவான். இது போல் சுமார் பத்து பேரை கொன்றிருப்பான். இது ரிக்கார்டில் இருப்பது. உண்மையில் ஐம்பது பேருக்குக் குறையாது. என்ன நடந்தது என்று இரண்டாம் பேருக்குத் தெரியாது. என்ன நடந்தது என்று தெரிவதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிடும். எதிரே இருப்பது யார் என்பது முக்கியம் இல்லை. கலவரம் நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வரையில்தான் கொள்ளையடிக்க முடியும். கலவரம் குறைந்து வருவது போல் தோன்றினால் கத்தியால் இரண்டு மூன்று பேரை குத்தி விட்டால் போதும். ரகளை மறுபடியும் தலை தூக்கும். அவன் செய்து வந்ததும் அதுதான்.

    வரிசையில் நாலாவதாக இருந்தவனின் பெயர் ராமானந்தம். எல்லோரையும் விட குள்ளம். ஒல்லியான உருவம். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். அவன் தோற்றத்தையும் முகத்தையும் பார்த்துவிட்டு அப்பாவி என்று நினைத்தால் அது தவறு. அவனை எல்லோரும் எலி என்று அழைப்பார்கள். மூன்று முறை ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு விட்டான். எந்த ஜெயிலும் அவனைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என்பது பிரசித்தம். இந்த ஜெயிலுக்கு வந்த பிறகுதான் அவன் பாச்சா பலிக்கவில்லை. இங்கிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் மூன்று போலீசாரை கொல்ல முயன்றான். இந்த ஜெயில் அவன் கொட்டத்தை அடக்கிவிட்டது.

    டிஸ்பர்ஸ் சிவபிரசாதின் கத்தலைக் கேட்டு இந்த உலகிற்கு மீண்டு வந்தேன். கைதிகள் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

    கைதிகளின் கௌன்சில் வந்த பிறகு நாங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதாகிவிட்டது. கைதிகளின் உடல் மீது கையை வைக்கக் கூடாது. கைதிகள் ஏதாவது வித்தியாசமாக நடந்து கொண்டால் சாலிடரி கன்பைன்மெண்டில் (தனிமை செல்) சில நாட்கள் அடைத்து வைப்பது ஒன்றுதான் எங்களால் விதிக்கக் கூடிய அதிகபட்ச தண்டனை. அதனால்தான் சிவபிரசாத் போன்ற அதிகாரிகள் கைதிகள் எவ்வளவு டீஸ் செய்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிலும் மற்ற ஜெயில்களின் விஷயம் வேறு. இங்கே இருப்பது மனித உருவில் இருக்கும் அரக்கர்கள். அவர்களுடன் கொஞ்சம் விரோதித்துக் கொண்டாலும் போதும், அவர்கள் வெளியே வந்ததுமே தம் மனைவி மக்களுக்கும் தமக்கும் பாதுகாப்பு இருக்காது என்ற உண்மை அந்த ஜெயிலில் இருக்கும் ஊழியர்கள் எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்குத் தெரியும் என்று கைதிகளுக்கும் தெரியும். அதனால்தான் டீஸ் செய்து கொண்டிருப்பார்கள், என்னைத் தவிர.

    என்னைப் பற்றி அவர்கள் எல்லோருக்குமே தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் அது. பீமராஜ் என்ற பயங்கரமான க்ரிமினல் கைதி ஒருத்தன் இருந்தான். இப்பொழுதும் இங்கேதான் இருக்கிறான். ஒரு முறை ரவுண்டிற்குப் போன போது அவனுடைய ஜன்னலுக்கு வெளியே புதரில் 555 சிகரெட் பாக்கெட் காலியாய் கிடந்தது தென்பட்டது. யாருடையது என்று கேட்ட போது யாருமே பதில் சொல்லவில்லை. கண்காணித்துக் கொண்டே வந்ததில் அவன் புகைபிடிக்கும் போது பிடித்துவிட்டேன். என்னைப் பார்த்ததும் சிகரெட்டை நசுக்கி தூர வீசிவிட்டு உன்னிடம் ஆதாரம் எங்கே இன்ஸ்பெக்டர்? என்று சிரித்தான். சிவபிரசாதைப் பார்த்து சிரிப்பது போலவே சுற்றிலும் இருந்த கைதிகள் கொல்லென்று சிரித்தார்கள். நான் தலை குனிந்து கொண்டு போய்விட்டேன்.

    அன்று இரவு எட்டு மணிக்கு அவனுடைய செல்லிற்குப் போனேன். வெளியே இருந்த மைதானத்திற்கு அழைத்துச் சென்றேன். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை. உன்னிடம் சாட்சியமோ ஆதாரமோ ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கட்டுமா? என்று கேட்டேன். அவன் வினோதமாக பார்த்தான். அதற்குள் புரிந்துவிட்டாற்போல் சிரித்தான். அவன் பலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் ரொம்ப சிறியவன். ஆனால் என்னிடமிருந்த போலீஸ் பயிற்சி அவனுக்குக் கிடையாது. சரியாய் இரண்டே நிமிஷத்தில் அவன் கால் எலும்பு முறிந்தது.

    பிரிசினர்ஸ் கௌன்சிலுக்கு ரிப்போர்ட் செய்வதற்கு உன்னிடம் கூட எந்த சாட்சிய ஆதாரங்களும் இல்லை பீம்ராஜ்! ஜெயில் ஆஸ்பத்திரியில் இரண்டு மாதங்கள் இரு. யாராவது கொடுத்தாலும் இனி 555 சிகரெட் பாக்கெட்டை வாங்கிக் கொள்ளாதே என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டேன். கௌன்சிலுக்கு ரிப்போர்ட் செய்வதற்கு அவன் ஆணவம் குறுக்கிட்டது.அதற்குக் காரணம் நான் எந்த ஆயுதமும் பயன்படுத்தாமல் போனதுதான்.

    அதற்கு மறுநாள் சுபரிண்டென்ட கூப்பிட்டு லேசாக கடிந்து கொண்டார். கைதியை இரவு நேரத்தில் செல்லிலிருந்து வெளியே அழைத்துச் சென்றதற்கு. ஆனால் இந்தச் செய்தி வெளியே குப்பென்று பரவிவிட்டது. பீம்ராஜ் போன்றவனை சரி செய்ததற்கு பாராட்டுக்கள் கிடைத்தன. கைதிகள் பயந்தபடி பார்க்கத் தொடங்கினார்கள். அன்று முதல் ஜெயிலில் என் மதிப்பு கூடிவிட்டது.

    அந்த பீம்ராஜுக்கு ரொம்ப செல்வாக்கு இருக்கு. விரைவில் பரோலில் வெளியே போகலாம். ஜாக்கிரதையாக இரு என்று எச்சரித்தார்கள்.

    கிழித்தான். வாழ்க்கையிடம் எனக்கு பயம் இல்லை. எனக்கு இருப்பது அம்மா ஒருத்திதான். நான் செய்த காரியத்தை அம்மா மறுப்பாள் என்று நான் நினைக்கவில்லை. ஒருக்கால் நான் இப்படிச் செய்யாமல் பீம்ராஜுக்கு பயந்து போயிருந்தால் அம்மா என்னை திட்டியிருப்பாள் என்று நினைக்கிறேன் என்றேன்.

    நான் எண்ணியது உண்மைதான். அம்மா என்னை உச்சி முகர்ந்தாள். சிறுவயதிலிருந்தே வகுப்பில் முதல் மார்க் வந்தாலும், ஏதாவது போட்டியில் பரிசு வந்தாலும் அம்மா என் உச்சியில் முத்தம் பதிப்பது வழக்கம். மூன்றாவது வகுப்பில் இருக்கும் போது என்று நினைக்கிறேன். கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். கையிலிருந்து புத்தகப் பை நழுவி விழுவதை கூட பொருட்படுத்தாமல் வீட்டிற்கு ஓடிப் போய் அம்மாவிடம் அந்த விஷயத்தைச் சொன்னேன். அம்மா என் தோளில் தட்டிக் கொடுத்தாள். எனக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது.

    இவ்வளவு கஷ்டப்பட்டு முதல் மார்க் வாங்கியதுடன் ஓடி வந்து சொன்னால் இவ்வளவுதானா? என்றேன் ரோஷத்துடன்.

    வேறு என்னடா வேண்டும்? என்றாள் சிரித்துக் கொண்டே.

    எனக்கு சைக்கிள் வேண்டும்.

    அம்மா என்னை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள். பாருடா கண்ணா! நாம் ஏழை. நீ இந்த மாதிரி யெல்லாம் கேட்கக் கூடாது. நீ நன்றாக படித்து நல்ல வேலை கிடைத்துவிட்டால் அப்போ உனக்குப் பிடித்ததை எல்லாம் வாங்கிக் கொள்ளலாம். உனக்கு பரிசு வேண்டும் என்றால் என்னால் ஒன்று கொடுக்க முடியும். ஆனால் ரொம்ப ஏழ்மையானது.

    என்னம்மா?

    அப்பொழுது அம்மா என் நெற்றியில் முத்தம் பதித்தாள். ஏனோ தெரியவில்லை. எனக்கு நன்றாக அழுகை வந்துவிட்டது. அம்மா என்னைத் தேற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. தன் துக்கத்திலிருந்து மனிதன் தானாகவே வெளியேறி வரவேண்டும் என்பது அம்மாவின் கொள்கை. ஒருக்கால் அவ்வாறு வெளியே வந்ததால்தான் அவளுக்கு வாழ்க்கையிடம் இவ்வளவு உறுதி ஏற்பட்டதோ என்னவோ. அந்த உறுதியோடுதான் என்னை ஒரு ஆளாக திருத்தியமைத்தாள், அதற்குப் பிறகு என்றுமே எங்கள் வாழ்க்கையில் பணம் ஒரு பிரச்னையாக இருந்தது இல்லை. கவலைகள் தொடரவில்லை.

    ரத்தவெறி கொண்ட கயவர்களை அப்பாவி மக்களிடமிருந்து பிரித்து வெகு தொலைவில் இருக்கும் இந்த ஜெயில் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதைவிட அதிகமாக, பிரச்னைகளை நேராக எதிர்த்து நிற்பதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்த அம்மா என்றால் இன்னும் ஒருபடி கூடுதல் விருப்பம்.

    இந்த இரண்டையும் விட அதிகமாக பாதிப்பை ஏற்படுத்திய நபர் சீக்கிரமாகவே என் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தான்.

    *****

    சூபரின்டெண்ட் சார் வருகிறார் என்று சொன்னான் ஜவான். தொலைவில் சிவபிரசாத் அவருடன் சேர்ந்து வார்டுகளை நோக்கிப்

    Enjoying the preview?
    Page 1 of 1