Varuvaal, Kaadhal Devathai…
3/5
()
About this ebook
Read more from Vidhya Subramaniam
Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Kaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Cauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsOomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsPon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Malargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsVittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Kaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsKopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsAval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5
Related to Varuvaal, Kaadhal Devathai…
Related ebooks
Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsUllam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsThoorangal Nagarkindrana Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thotta Rating: 0 out of 5 stars0 ratingsSwasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsThoongatha Vizhigal Irandu Rating: 0 out of 5 stars0 ratingsVaruven Naan Unakkaga...! Rating: 4 out of 5 stars4/5Poongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Meettatha Veenai Rating: 5 out of 5 stars5/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Uyiriley Ninaivugal Thalumbuthey! Rating: 4 out of 5 stars4/5Andha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Nee Matrum Naan Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vamsam Neeyo! Rating: 1 out of 5 stars1/5Yenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Chennaiyil Oru Mazhainaal! Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Peiyena Peiyum - Kaadhal! Rating: 2 out of 5 stars2/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Ninnai Saranadainthean Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnandhi Rating: 5 out of 5 stars5/5Ivan Vasam Vaaraayo! Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Varuvaal, Kaadhal Devathai…
3 ratings0 reviews
Book preview
Varuvaal, Kaadhal Devathai… - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
வருவாள், காதல் தேவதை...
Varuvaal, Kaadhal Devathai…
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
இனிய நட்புக்கு,
வருவாள் காதல் தேவதை! தேவியில் தொடராக வந்து பெரும் பாராட்டுக்களை பெற்று, இப்போது உங்கள் கையில் புத்தகமாக தவழ்கிறாள். மனிதர்களின் யதார்த்தமான குணநலன்கள் இதன் கதாபாத்திரங்களிடம் வெளிப் பட்டிருப்பதாக சில வாசகர்கள் நேரிலும், தொலைபேசியிலும் சொன்னது நினைவுக்கு வருகிறது. வெறும் கற்பனை சுகத்தை மட்டுமே கதைகளின்மூலம் கொடுப்பதில் எப்போதும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. வாழ்க்கை என்பது எல்லாம் நிறைந்ததுதான். அந்த எல்லாம் என் நாவல்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். என்ன இவ்வளவு கஷ்டம் என்ற சலிப்பு சிலருக்கு வந்தாலும் நிஜங்கள் அப்படித்தான் இருக்கும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். எல்லோருடைய வாழ்க்கையும் இங்கே பளிங்குத் தரையில் பதவிசாக நகர்வதில்லை. சிலருடைய வாழ்க்கை சபரிமலை யாத்திரையாகவே கற்களும் முட்களும் நிறைந்த தாயிருக்கிறது. பாதை எப்படியிருந்தாலும் அதன் முடிவில் கிடைப்பது அற்புதமான தெய்வ தரிசனம் என்பதை உணர்பவருக்கு அந்த கற்களும் முட்களும் கூட இனிமை யாகவே இருக்கும்.இந்நாவலை தொடராக வெளியிட்ட தேவி ஆசிரியருக்கும், தற்போது புத்தக வடிவில் வெளியிடும் தேவி வெளியீட்டாளருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,வாசகர் களாகிய உங்களுக்கும் கூடத்தான்.
அன்புடன்,
வித்யா சுப்ரமணியம்.
வருவாள், காதல் தேவதை...
1
காதல் பெண்களை உயர்த்தி வைக்கிறது அவர்களுக்கு சக்தி அளிக்கிறது ஆனால் ஆண்களை பலவீனப்படுத்தி விருகிறது.
- டால்ஸ்டாய்
மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. முதல் வகுப்பு பெட்டியில் வேகமாக வந்து ஏறினான் ஆகாஷ், இன்னும் ஐந்து நிமிடம் லேட்டாக வந்திருந்தால் வண்டி கிளம்பிப் போயிருக்கும். சென்னையில் வாகன நெரிசல் அதிகரித்து விட்டது. சீக்கிரமே கிளம்பியும் கூட டிராபிக் ஜாமிலும், சிக்னலிலும் மாட்டிக் கொண்ட ஆட்டோ கட்டை வண்டிபோல்தான் ஊர்ந்தது. நல்ல காலம் வண்டி புறப்படுவதற்குள்ளாக வந்து சேர்ந்துவிட்டான்.
ஆகாஷ் தன் பிரிஃப்கேஸை பாதுகாப்பாக வைத்துவிட்டு ஜன்னலோரம் இருந்த சீட்டில் அமர்ந்தான். மூன்றாவது விசில் ஊதப்பட வண்டி மெல்லக் கிளம்பியது. யாரோ தி.புதிபுவென்று ஓடி வந்தார்கள். ஆகாஷ் ஜன்னல் வழியே பார்த்தான். ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்த இளம் பெண் ஒருத்தி காற்றில் கேசம் பறக்க ஓடி வந்து பெட்டியில் ஏற முயன்றாள். கூட்டம் அவளை பதற்றத்தோடு பார்த்தது. ஆகாஷ் சட்டென்று எழுந்து கதவருகில் வந்து நின்று ஒரு கை கொடுத்து அவளை லாவகமாய் உள்ளே இழுத்துக் கொண்டான். தேங்க்யூ என்றவளை முறைத்துப் பார்த்தான்.
அறிவிருக்கா உனக்கு? ஒடற - டிரெயின்ல ஏறப் பார்க்கறயே..! ஏதாவது ஆயிருந்தா...? பத்து நிமிஷம் முன்னாடி வர வேண்டியது தானே?
"ஒரு மணி நேரம் முன்னாடியே கிளம்பியாச்சு. நா என்ன செய்ய மேம்பாலம் கட்டறோம்னு அங்கங்க ரோடை நோண்டி வெச்சிருக்காங்க. ஒரே டிராஃபிக் ஜாம்... பொறுமை எல்லாம் போய் ஒரு வழியா வந்து சேர்ந்தா மூணாவது விசில் ஊதறாங்க. நல்ல காலம் நீங்க ஒரு கை கொடுக்காட்டி என் பிரயாணம் தடைப்பட்டிருக்கும்? அவள் வியர்வையைத் துடைத்துக் கொண்டு தன் சீட் நம்பரைத் தேடிப் பிடித்து அமர்ந்தாள். அவனுக்கு எதிர் வரிசையில் கதவோரம் இருந்தது அவள் சீட்.
தனக்கேற்பட்ட அதே சோதனைதான் அவளுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்றறிந்ததும் அவளைப் பரிவோடு பார்த்தான்.
வண்டி வேகமெடுத்திருந்தது. நாலு பேர் அமரக்கூடிய அந்த அறையில் அவர்களைத் தவிர கேரளத்தை சேர்ந்த நடுத்தர வயதான தம்பதிகளும் பிரயாணம் செய்தனர். வண்டி புறப்பட்ட சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் மேல் பர்த்தில் ஏறி நிம்மதியாகப் படுத்துவிட அந்த இளம் பெண்காற்றுக்காக ஜன்னலருகில் வந்து ஆகாஷின் எதிரில் அமர்ந்தாள். அவள் கையில் ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட்.
எடுத்துக்கோங்க.
அவனிடம் நீட்டினாள்.
நோ தேங்க்ஸ். டிரெயின்ல யார் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடறதில்ல.
ஒ மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளையடிக்கற கும்பலோன்னு சந்தேகப்படறீங்களா...?
அப்டின்னு இல்ல... எப்பவுமே அப்டிதான்.
எனி ஹவ். நல்ல பழக்கம்தான். உங்க பேர்?
ஆகாஷ்! உங்க பேர் எனக்கு தெரியும். சுஜிதா கரெக்டா?
மை காட்...எப்.டி...?
ரொம்ப சிம்பிள். ரிஸர்வேஷன் சார்ட்ல இருக்கே அவள் சிரித்தாள். நீங்க மும்பைக்காரரா இல்ல சென்னை வாசியா?
மும்பைக்கு பிரயாணம் செய்யற சென்னைவாசி.
நா மும்பைவாசிதான். ஆனா இப்போதைக்கு சென்னை வாசி! ஃபேஷன் டிஸைன் படிப்புக்காக ஹாஸ்டல் வாசம். வெக்கேஷனுக்காக போறேன்.
தமிழ் நல்லா பேசறீங்க!
மும்பைல செட்டிலான தமிழ்க் குடும்பம்தான் எங்க குடும்பம். நா பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். வீட்ல தமிழ். வெளில ஹிந்தி, இங்கிலீஷ். ஸோ.. மூணு மொழி சரளமா தெரியும். ஊர் விட்டு ஊர் போய் செட்டிலாறதுல இது ஒரு வசதி இல்லையா?
டெஃபனட்டா இப்ப பாருங்க. நானும் தமிழ்நாட்டுக் காரன்தான். ஆனா ஹிந்தி தெரியாதே. இங்கயே வளர்ந்ததன் பலன்!
ஒரு வாரம் மும்பைல இருங்க. நூறு வார்த்தையாவது கத்துப்பீங்க. ஆமா என்ன வேலையா மும்பை வரிங்க?
ஆபீஸ் வேலை தவிர வேறென்ன?
எங்க வேலை பார்க்கறீங்க?
ஒரு விளம்பரக் கம்பெனில முக்கிய பொறுப்புல இருக்கேன். விளம்பரப்படம் சம்பந்தமாதான் மும்பை போயிட்ருக்கேன்.
உங்களுக்கொரு விஷயம் சொல்லியே ஆகணும்
என்ன சொல்லுங்க
'
'நான் கூட ஒரு மாடல்தான் தெரியுமா?"
இஸ் இட்...!
ஆகாஷ் வியப்போடு அவளைப் பார்த்தான். சட்டுனு நினைவுக்கு வரல. 'என்ன பொருட்களுக்கு மாடலிங் பண்ணிட்ருக்கீங்க?"
இதோ இந்த பிஸ்கட்டுக்கு தான்.
அவள் சலங்கை குலுங்கினாற் போல் சிரித்தாள். இப்ப நா ஒடற வண்டில ஸ்டைலா உட்கார்ந்து பிஸ்கட் சாப்டறதை படம் எடுத்தா நானும் மாடல் தானே அதுவும் விளம்பரம்தானே!
இவ்ளோதானா...? நா நிஜமாவே மாடலாக்கும்னு நினைச்சேன். பரவால்ல. நல்லாவே பேசறிங்க. நிஜமாவே மாடலிங் பண்ணலாமே நீங்க...?
ஆசைதான். ஆனா வீட்ல ஒத்துக்க மாட்டாங்களே. மும்பைல எங்கப்பா பெரிய பணக்காரர். கோடிகளில் புரள்றவர். இப்பக்கூட நா பிளைட்ல வராம டிரெயின்ல வரது தெரிஞ்சா கத்து கத்துன்னு கத்துவார். அவர் மானம் மரியாதையே போய்ட்டாப்பல அலறுவார்.
அப்புறம் ஏன் டிரெயின் பிரயாணம்?
சும்மா ஒரு த்ரில்லுக்காகத் தான். அதுலயும் ஒரு நல்லது இருக்கு பாருங்க. நா பிளைட்ல போயிருந்தா உங்களை சந்திச்சிருக்க முடியுமா?
அவள் சொல்ல அவன் சட்டென்று ஒருவித குளிர்ச்சியை உணர்ந்தான் அந்த வார்த்தைகளில்.
உங்களுக்கு கல்யாண மாய்டுச்சா
சில நிமிட இடைவெளிக்குப் பிறகு அவள் கேட்டாள்.
ம்... ஆய்டுச்சே... எதுக்கு கேக்கறீங்க?
இஸ்... இட்...! பார்த்தா தெரியலையே....
என்னைப் பார்த்தா எப்டிங்க தெரியும்? எம் பெண்டாட்டியைப் பார்த்தா இல்ல தெரியும் ஏழு மாசம். மூணாவது குழந்தை
நம்பவே முடியல...
எனக்கே நம்பத்தான் முடியல. காலேஜ் படிச்சுட்ருக்கும் போதே இழுத்துப் பிடிச்சு கட்றா தாலியன்னாங்க. லவ்வு கிவ்வுன்னு கெட்டுப் போய்டுவேனாம்! அதான் கால்கட்டாம். வீட்டுக்கு பயந்தவனாச்சே. கட்டிட்டேன்.
சரி தாலி கட்டிட்டீங்க. அட்லிஸ்ட் குழந்தைங்க விஷயத்துலயாவது ஜாக்கிரதையா இருந்திருக்கலாமே. இந்தக் காலத்துல மூணாவது குழந்தையா... வெரி பேட்...! அது சரி.. எனக்கென்ன? நீங்க யாரு நான் யாரு. இதையெல்லாம் சொல்ல!
அவள் அதற்கு மேல் பேச விரும்பாதவள் போல் தன் லெதர் பேகிலிருந்து ஒரு தடித்த ஆங்கில நாவலை எடுத்து பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.
சிட்னி ஷெல்டன்னா பிடிக்குமா உங்களுக்கு? எனக்குக் கூட பிடிக்கும் ஜெஃப்ரி ஆர்ச்சர் படிச்சிருக்கீங்களா? எனக்கு அதுவும் பிடிக்கும்.
நா கேட்டேனா உங்களை? என்னைப் படிக்க விடுங்களேன்.
அவன் சிரிப்போடு ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்தான். சற்றுபொறுத்து மீண்டும் அவளைப் பார்த்தான்.
நைட் துரங்கும்போது எனக்காக ஒரு பிரார்த்தனை செய்றீங்களா சுஜிதா?
அவள் நிமிர்ந்தாள். 'என்ன பிரார்த்தனை?"
மூணாவது குழந்தையாவது என்னை மாதிரி ஸ்மார்ட்டா ஆண் குழந்தையா பிறக்கணும் எனக்குன்னு வேண்டிக்கோங்களேன். கூட்டுப் பிரார்த்தனைக்கு வலு அதிகமே. அதான் பார்க்கறவங்க எல்லார் கிட்டயும் சொல்லி வேண்டிக்கச் சொல்றேன்.
அவள் எரிச்சலோடு அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.
என் ஒய்ஃப் பேரு என்னன்னு கேக்கலையே நீங்க. ஸ்வேதா நல்ல பேர் இல்ல? குலோப்ஜாமூன்மாதிரி இருப்பா. அவ்ளோ அழகு! நீயெல்லாம் என்ன கலர்? கலர்னா அவதான். பூ விழுந்தா கூடகன்னிச்சி வந்துடும்னா பார்த்துக்கோங்க அவ அழகுக்கு உதாரணமே கிடையாது. இன்ஃபாக்ட் அந்த அழகைப் பார்த்து மயங்கிப் போய்தான் படிக்கற வயசுல நா கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். அவ்ளோ லவ்! மூணு என்னங்க அவகிட்ட முப்பது கூட...
''எக்ஸ்கியூஸ்மி. நா கேட்டேனா இதையெல்லாம்? உங்க பெண்டாட்டிய நீங்க ஜொள்ளு விட்ட கதையெல்லாம் எனக்கெதுக்குசார்... போரடிச்சா நீங்களும் ஏதாவது படிங்க இல்ல படுத்து தூங்குங்க. என்னைப் போட்டு அறுக்காதீங்க"
அவள் சிடுசிடுத்து விட்டு மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள்.
அவன் மீண்டும் மெளனமானான். பிறகு வெகு நேரம் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்தபடி வந்தான். இடையில் சுடச்சுட வந்த டிபன் வகையறாக்களில், கப் நூடுல்ஸ் ஒன்று வாங்கி சாப்பிட்டு விட்டு ஒரு கிளாஸ்பாலும் குடித்தான். அவள் இட்லி பாக்கெட் வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் சிட்னி ஷெல்டனில் மூழ்கினாள். ரயிலின் தடக் தடக் சப்தத்தை தவிர வேறு எவ்வித சப்தமும் இல்லை.
ஒன்பது மணிக்கு மேல் அவள் கொட்டாவி விட்டபடி புஸ்தகத்தை மூடினாள். தன் பையைத் திறந்து புத்தகத்தை பத்திரப்படுத்தி விட்டு, ஏர் பில்லோ எடுத்து ஊதி பருமனாக்கினாள். பெட்வீட் ஒன்றை எடுத்து உதறி போர்த்திக் கொண்டு படுத்தாள்.
எனக்காக இன்னும் ஒரே ஒரு பிராத்தனை செய்யுங்களேன்.அதுக்கப்பறம் தூங்குங்க
அவள் மெளனமாய் முறைத்தாள்.
நாசொன்னபழைய பிரார்த்தனை இல்லை. இது வேற! அது வேண்டாம்! இதுமட்டும் வேண்டிக்கிட்டா போதும். ப்ளீஸ்...
அவள் என்ன என்பது போல் பார்த்தாள்.
சீக்கிரமே கல்யாணமாய்டுச்சா. அதனால இந்த காதல் கீதல்னு எந்த த்ரில்லுமே எனக்கு கிடைக்கல. அதனால பஸ்ட் கிளாஸா, கல்கத்தா ரஸ்குல்லா மாதிரி ஒரு காதலி எனக்குகிடைக்கணும்னு வேண்டிக்கோங்களேன்.
ஷட். அப். என்னை என்ன மிஸ்டர் நினைச்சீங்க நீங்க...? உங்க சீப்பான ஆசையெல்லாம் நிறைவேற நா பிரார்த்தனை செய்யனுமா...? இனிமே நீங்க வாயத் திறந்தீங்க... நா பொல்லாதவளாய்டுவேன். ஏதோ கையப் பிடிச்சு வண்டில ஏற உதவினிங்களேன்னுமதிச்சு ரெண்டு வார்த்தை பேசினா... மட்டமா பிஹேவ் பண்றீங்களே!
ஓ.கே... ஒகே... இனிமே பேசல.. கோச்சுக்காதீங்க. அதென்னமோ தெரியல...ஜெனரலா நா லேடீஸ் கிட்டல்லாம் பேசவே மாட்டேன். உங்க கிட்டதான் இப்டி. ரொம்ப ஜென்மமா பழகினாப்போல பேசறேன். எனக்கே ஆச்சர்யமார்க்கு.
இதுல ஆச்சர்யம் என்ன? இதான் ஆம்பளை புத்தி. அலையற புத்தி!
-
இது ஆம்பளை புத்தின்னா, பொம்பளை புத்தி எதுன்னு நா சொல்லவா. ஒருஆம்பளைக்கு கல்யாணமாய்டுச்சுன்னு தெரிஞ்சா உடனே பேச்சை நிறுத்திக்கறது பொம்பளை புத்தி, நா சொல்றது சரியா...?
'நீங்க அதிகம் பேசறீங்க..."
சரி இனிமே பேசல. நிம்மதியா தூங்குங்க மிச்சத்தை நாளைக்கு பேசிப்போம்.
அவன் திரும்பிப் படுத்தான்.
ரயில் இரவைக் கடந்து விரைந்து கொண்டிருந்தது.
வண்டியின் மெல்லிய அசைவில் அரைத் தூக்கம்தான் தூங்க முடிந்தது. ஐந்து மணிக்கு அவனுக்கு விழிப்பு வரும்போது அவள் இழுத்துப் போர்த்திக் கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தாள். மலையாளத் தம்பதிகள் சூடாக டீ குடித்துக் கொண்டிருந்தனர். மயக்க மருந்து கொள்ளைக்காரர்களின் பயத்தால் இப்போதெல்லாம் ரயில் சிநேகம் வெகுவாக குறைந்துவிட்டது. மனிதனைக் கண்டு மனிதன் பயப்படுவது எவ்வளவு கேவலம்! அன்பென்ற பிரபஞ்ச வட்டத்திற்குள் வராமல் பயமென்ற எலிப்பொறிக்குள் மனிதர்கள் முடங்கிப் போய்விட்ட கொடுமை எதனால்...? பயத்தினால் பாதுகாப்பு உணர்வு கூடுகிறது. ஒன்றுமில்லாதவன் எதைப் பாதுகாக்க வேண்டும்? எதற்கு பயப்பட வேண்டும்? மனிதரில் ஒரு சிலர் மனிதத்தை இழந்து ஐந்தறிவு மிருகங்களாய் மாறும்போது மற்றவர்களுக்கு பயம் ஏற்படத்தான் செய்யுமோ? மனிதனிடமிருந்து மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னைச் சுற்றி சந்தேக வலை விரித்து, பேச்சடக்கி, புன்சிரிப்படக்கி, நட்படக்கி, அன்பையடக்கி... சின்னச் சின்ன வளையங்களுக்குள் வெறுமையாய் முடங்கி... எங்கே போகிறது உலகம்?
ஆகாஷ் பெருமூச்சு விட்டான். அவனால் இப்படி முடங்க முடியாது. சளசளவென்று பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் அவனுக்கு. எதிரில் யாருமில்லாவிட்டாலும் கவலையில்லை. மனிதனைத் தவிர எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன. அவற்றோடு பேசுவான். தூரத்து மலைகள், நதிகள், முகத்தில் மோதும் காற்று, மேகத்தில் ஒடும் நிலவு, பரந்து விரிந்த ஆகாயம், கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் என்று எல்லாவற்றோடும் பேசுவான். பேச்சுக்கு சப்தம் அவசியமில்லை. விழிகளும், எண்ணங்களும் போதும். மெளனமாய் எவற்றோடும் பேச முடியும். அப்படித்தான் எதிரில் உறங்கிக் கொண்டிருந்த சுஜிதாவோடும் பேச ஆரம்பித்தான்.
நீ யார் பெண்ணே... எங்கே பிறந்தாய்? யாருக்கு பெண்ணாகப் பிறந்தாய். எதற்காக வளர்ந்தாய்? இன்று ஏன் என்னோடு பிரயாணம் செய்கிறாய்...? நாம் இன்று சேர்ந்து பிரயாணம் செய்ய வேண்டும் என்ற விதிக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம்தான் என்ன...? உன்னை ஏன் எனக்கு பிடித்திருக்கிறது? உன்னைச் சீண்டிப் பார்க்க ஏன் எனக்கு ஆசை வந்தது? கல்யாணமாகி மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறது என்று ஏன் உன்னிடம் பொய் சொல்லி விளையாடத் தோன்றியது? என் கேள்விகளுக்கெல்லாம் உனக்கு விடை தெரியுமா...? தெரிந்தால் சொல்வாயா? உன் கையைப் பிடித்து வண்டியில் ஏற்றியபோது உள்ளங்கை வழியே எதுவோபாய்ந்து என்அடிவேர்வரை சென்றதே அதன் பெயர் என்ன? உனக்கும் அப்படி இருந்ததா? எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ரயில் பிரயாணம், வாழ்க்கைப் பயணமாக தொடர வேண்டும் என்று எனக்குள் ஒரு ஆசை முளைக்கிறதே, உனக்குப் புரிகிறதா... ஏன் என்று...? அவன் அவளையே பார்த்துக் கொண்டு வந்தான். சற்று நேரத்தில் அவள் போர்வை மெல்ல நகர்ந்து, கிரகணம் விட்ட நிலவு மாதிரி அவள் எழுந்தமர்ந்து தன் உருவம் காட்டினாள். அவனைப் பார்த்து விட்டு மெளனமாய் எழுந்து கொண்டாள்.
"குட் மார்னிங்' அவன் சொல்ல வேறு வழியின்றி அவளும் பதிலுக்கு சொல்லிவிட்டு பாத்ரூம் பக்கம் சென்றாள். பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு பளிச்சென்று திரும்பி வந்தாள்.
நல்லா தூங்கினிங்களா?
"ம்''
எனக்கு அரைத் தூக்கம்தான்.
ஒஹோ...
காபி சொல்லவா?
"நோ தேங்க்ஸ்...' *
மயக்க மருந்து பயமா?
அவள் பதில் சொல்லாமல் குனிந்து சிட்னி ஷெல்டனை எடுத்தாள்.
உள்ளே ஒரு துண்டுச் சீட்டு இருக்க புருவம் சுருக்கியபடி அதைப் பிரித்தாள்.
எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டதற்கு நன்றி. உங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை. எனக்கொரு காதலி கிடைத்து விட்டாள்.
இப்படிக்கு
கல்யாணமாகிவிட்டது என்று
பொய் சொன்ன கட்டை பிரம்மச்சாரி ஆகாஷ்.
அவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவன் விஷமச் சிரிப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
சற்று நேரத்தில் மீண்டும் சலங்கை மணிகள் சிதறியது. முகம் சிவக்க சிரித்தாள் அவள்.
ஆனாலும் ரொம்ப மோசம் நீங்க..
''நானா...? நீங்கதான் மோசம். ஏங்க கல்யாணமான ஆம்பளைன்னா அவ்ளோ கேவலமா?"
அதெல்லாம் இல்ல, மனைவி மூணாவது கர்ப்பம்னு சொன்னிங்க பாருங்க. அப்பொதான் எரிச்சல் வந்தது. ஏன் இப்டி பொய் சொன்னிங்க?"
மாடல்னு நீங்க சின்ன பொய் சொன்னதுக்கு பழிக்குப் பழி!
அது சரி பிரார்த்தனை நிறைவேறிடுச்சு. நன்றின்னு ஏதோ எழுதியிருக்கீங்க...? எப்பொ சார் உங்களுக்கு காதலி கிடைச்சா.. கேண்டீன்லேர்ந்து கொண்டு வந்து கொடுத்தாங்களா...?
அப்டித்தான் வெச்சுக்கறது!
சொல்லமாட்டீங்களாக்கும்.
சொல்லுவேன் இப்பொ இல்ல. இறங்கும்போது ஆளைக் காட்டி இவதான்னு சொல்லுவேன்.
அவள் புதிருக்கு விடை தெரியாமல் அவனையே பார்த்தாள்.
உட்ன் மகனுக்கு நல்ல மனைவி கிடைத்தால் உனக்கொரு மகள் கிடைப்பாள் இல்லையென்றால் உன் மகனை நீ இழப்பாய்.
பெர்னாட்ஷா
2
உன் மகனுக்கு நல்ல மனைவி கிடைத்தால் உனக்கொரு மகள் கிடைப்பாள், இல்லையென்றால் உன் மகனை நீ இழப்பாய்.
சம்பத் கடிகாரத்தையும், மூடியிருந்த அந்த அறைக் கதவையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த ஆகாஷ் பிஸினஸ் இண்டியாவின் கடைசி பக்கத்திற்கு வந்திருந்தாள்.
"ஏண்டா ஆகாஷ்... உள்ள என்னதான் பண்றாங்க அம்மாவும் பெண்ணும், மூடின கதவை சொர்க்க வாசல்
"என்னப்பா நீ, லேடீஸ் டிரெஸ்ஸிங்னா சும்மாவா? பீரோல இருக்கற அத்தனை புடவையையும் இழுத்து போட்டு பரப்பி வெச்சுக்கிட்டு எதை உடுத்திக்கறதுன்னு தீர்மானம் பண்ண ஒரு மணி நேரம். அத்தனை புடவை இருந்தும் ச்சே ஒரு புடவை கூட ஒழுங்கால்லன்னு ஒரு முணுமுணுப்போட ஒருபுடவையை எடுத்து கட்டிக்க அரைமணி அப்பறம் நகைப் பெட்டியை காலி பண்ணி உடம்புல சார்த்திக்க முக்கா மணி அப்புறம், பவுடர், பொட்டு, தலை வாரல் பூச்சுடல் இத்யாதி இத்யாதி... எவ்ளோ இருக்கு!
அதுக்குள்ள அங்க கல்யாண முகூர்த்தம் போய் சீமந்த முகூர்த்தமே வந்துடும்.
நீ வேற! குழந்தைக்கு ஆயுஷ் ஹோமமே வந்துடும்னு சொல்லு
ஆகாஷ் சிரித்தான்.
சம்பத் எழுந்து சென்று அறைக்கதவைத் தட்டினார். ஆச்சா சாரதா, மணியாறதே!
இதோ வந்துட்டோம். அடடாடா... நிம்மதியா டிரெஸ் பண்ணிக்க விட மாட்டீங்களே!
முகூர்த்தத்துக்கு போய்ட்டு வந்தப்பறம் நாள் முழுக்க வேணா டிரெஸ் பண்ணிக்கயேன் யார் கேக்கப் போறாங்க?
மேலும் கால் மணி நேரம் கடந்த பின்பே கதவு திறந்தது. முழு அகலத்திற்கு ஜரிகையோடு கூடிய பட்டுப் புடவையும், தங்க வைர ஆபரணங்களுமாய் வெளியில் வந்த மனைவியைக் கண்டதும் கண் கூசுவது போல் பாவனை செய்தார் சம்பத்.
என்னடி இது... வீதி உலா புறப்பட்ட அம்மன் சிலையாட்டம்?
உங்க சொந்தக்காரங்க வீட்டு கல்யாணமாச்சே அதான் இப்டி வரேன். அப்பதான் உங்களுக்கு மரியாதை!
சரிதான். உம்பொண்ணு எங்க... ?
நா ரெடிப்பா
சங்கீதா குரல் கொடுத்தபடி வெளியில் வந்தாள்.
ரோஜா நிறத்தில் சுரிதாரும், அதே நிறத்தில் துப்பட்டாவும், ஹேர் கிளிப்பில் அடக்கிய தலைமுடியும், நெற்றியில் சின்ன கறுப்பு பொட்டுமாக எளிமையான அழகோடு வந்து நின்ற பெண்ணை வியப்போடு பார்த்தார்.
என்னம்மா... நீ பட்டுப்புடவை கட்டிக்கலையா? இந்த டிரஸ் பண்ணிக்கவா இவ்ளோ நேரம் ஆக்கின?
நா அஞ்சு நிமிஷத்துல ரெடியாய்ட்டேம்ப்பா அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்ருந்தேன்.
சம்பத் மனைவியை கிண்டலாகப் பார்த்தார்.
சரி கிளம்பலாமா... இல்ல இன்னும் ஏதாவது அலங்காரம் பாக்கியிருக்கா...?
கிளம்பலாம்...
அப்பாடா.. பிழைச்சேன். ஆகாஷ் சட்டுனு புறப்படுடா. காரை ஸ்டார்ட் பண்ணி ரெடியா வெச்சுக்கோ. இவ ஏறினதும் உடனே கிளம்பிடணும்.
இந்த கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல.
"பின்ன என்னம்மா.. மணி என்ன ஆறது பார். முகூர்த்தம் முடிஞ்சு சாப்பாடு கூட முடிஞ்சிருக்கும்.
அதுவும் தீர்ந்திருக்கும்டா. மிச்சம் மீதி காய்கறில ஒரு சாலட் பண்ணித் தந்து சாப்டுன்னு சொல்லப் போறாங்க பார்.
போறும்பா ரொம்பத்தான் வாராதிங்க. கிளம்புங்க..
சங்கீதா ஒடிப்போய் காரில் ஏறிக் கொண்டாள். ஒரு வழியாக அனைவரும் கல்யாணத்திற்கு புறப்பட்டார்கள். ஆகாஷ் காரை ஒட்டினான்.
சம்பத்தின் ஒன்றுவிட்ட தங்கையின் பெண்ணுக்குத்தான் கல்யாணம். தங்கை இறந்து விட்டாள். தகப்பனின் நிழலில் வளர்ந்த இரு பெண்களில் மூத்தவள் சத்யாவுக்குத்தான் திருமணம். இந்த திருமணத்திற்காக சம்பத் மனைவிக்குத் தெரியாமல் இருபதாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். சம்பத்தின் உறவுகளோடு சாரதா நெருங்கிப் பழகுவதில்லை. தன் ஜபர்தஸ்ஸைக் காட்டிக் கொள்வதற்கு மட்டுமே விரும்புவாள். இருப்பினும் சம்பத் அவளுக்கும் தெரியாமல் தன் உறவுகளின் வீடுகளுக்கு சுமூகமாக போய் வருவார். சின்னச் சின்ன உதவிகள் செய்வார்.
முக்கியமாக தாயின்றி வளர்ந்த சத்யா, சரண்யா இருவரின் மீதும் அவருக்கு தனி அன்பு உண்டு. இன்னும் சொல்லப் போனால் சத்யாவின் தங்கை சரண்யாவைத் தன் மகன் ஆகாஷ-க்கு கட்டி வைத்து மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவர் உள் மனதில் ஒளிந்து கொண்டிருந்தது. இந்த ஆசை நிச்சயம் நிறைவேறாது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய உறவு என்றாலே சாரதாவுக்கு இளப்பம். அதிலும் தங்களை விட அந்தஸ்தில் பல மடங்கு கீழே உள்ள கோபாலனின் பெண்ணையாவது அவள் மருமகளாய் ஏற்றுக் கொள்வதாவது இருந்தாலும் சம்பத்தின் உள் மனசுக்குள் அப்படி ஒரு ஆசை ஏற்பட்டிருந்தது.
ஆகாஷ் இதுவரை சரண்யாவைப் பார்த்ததில்லை. பொதுவாய் அவன் எந்த இடத்திற்கும் வரமாட்டான். இப்போது கூட அப்பா மிகவும் வற்பறுத்தியதால் தான் அரை மனதோடு கிளம்பியிருந்தான். ஒரே ஒரு முறை அவன் சரண்யாவைப் பார்த்து விட்டால் போதும் நிச்சயம் அவனுக்கு அவளைப் பிடித்து விடும். பிறகு தன் விருப்பம் நிறைவேறுவது சுலபமாகி விடும் என்று நினைத்தார் சம்பத். சரண்யாவைப் பார்ப்பதற்கு இந்த கல்யாணம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. குடும்பத்தோடு வந்து விடுவதாக கோபாலனுக்குக் கொடுத்த வாக்கையும் காப்பாற்ற வேண்டுமே...!
இந்த கல்யாணத்துல நாம தான் சீஃப் கெஸ்ட்டாம். நீதான் உன் திருக்கையால தாலியை ஆசீர்வாதம் பண்ணி எடுத்துக்கொடுக்கணும்னு கோபாலன் ஆசைப்படறார். அவர் இவ்ளோ மரியாதை கொடுக்கும் போது நாமளும் காப்பாத்திக்க வேண்டாமா? குடும்பத்தோட போகணும். நம்ம கெளரவத்தைக் காப்பாத்திக்கணும் சரியா...?
மனைவியை வார்த்தை வலைகளால் பிடித்தார்.
போய்ட்டா போச்சு...
மனைவி சம்மதித்தாளே என்று சந்தோஷப்பட்டால் மகன் சிணுங்கினான்.
அவங்களை எல்லாம் எனக்கு பழக்கமே இல்லப்பா. நா எதுக்கு? நீங்க மட்டும் போனா போறாதா?
என்னடா இப்டி சொல்ற... பழக்கமே இல்லன்னா எப்டி...? பழகினாதானே பழக்கம் ஏற்படும்? நம்ம உறவுகளை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா.. நாளைக்கு நம்ம நல்லது கெட்டதுக்கு நாலு பேர் வர வேண்டாமா? நீ இன்னும் சின்னப்பையனில்ல நாளைக்கு எனக்கப்பறம் நீதான் இந்த குடும்பத் தலைவன் எல்லாரையும் தெரிஞ்சுக்கணும் நீ. கிளம்பி வா நான் சொல்றேன்.
அவர் வற்புறுத்த அரை மனதோடு அவனும் கிளம்பி விட்டான். சங்கீதாவைப் பற்றி பிரச்சனை இல்லை. அவள் அப்பா பெண். அவர் எது சொன்னாலும் அவளுக்கு வேதவாக்கு.
எப்படியோ வெற்றிகரமாக அவரும் குடும்பத்தோடு புறப்பட்டு விட்டார். இதுவே நல்ல சகுனம்தான். அவர் மனசு சந்தோஷமாய் இருந்தது.
முகூர்த்தத்திற்கு இன்னும் அரை மணியே இருந்தது. கோபாலன் சத்திரத்து வாசலுக்கு வந்து வீதியைப் பார்த்தார். குடும்பத்தோடு சீக்கிரமே வந்து விடுவதாகச் சொன்ன சம்பத்தை இன்னும் காணவில்லை. அவர்களுடைய ஆசிர்வாதத்திற்காக தாலி காத்திருக்கிறது. இது சம்பத்தின் வேண்டுகோள். எம் பொண்டாட்டி வரணும்னா அவளுக்கு கிலோ கிலோவா ஐஸ் வெச்சு உபசாரம் பண்ணனும் அப்பதான் வருவா...
நீதான் தாலியை ஆசிர்வாதம் பண்ணிக் கொடுக்கணுமாம்னு சொல்லி கூட்டிட்டு வரேன். மறந்துடாம அவகிட்ட தாலியைக் கொடுத்து வாங்கிடு இல்லாட்டி நா அவ்ளோதான் சரியா...?" என்று முன்பே அவர் சொல்லியிருந்தார்.
சம்பத் நல்லவர். இந்த கல்யாணத்திற்கு இடது கைக்குக் கூடத் தெரியாமல் இருபதாயிரம் கொடுத்திருக்கிறார். இது தவிர, கோகிலா இறந்ததற்குப் பிறகு இன்று வரை எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். எவ்வளவு நேரமானாலும் சரி அவரும் அவர் மனைவியும் தொட்டு ஆசிர்வதித்த பிறகுதான் இந்த கல்யாணம் நடக்கும்.
கோபாலன் உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்தார்.
என்னப்பா.. இன்னுமா சம்பத் மாமா வரல...?
பின்னால் சரண்யாவின் குரல் கேட்க திரும்பினார்.
இன்னும் காணலையே.. ஒருவேளை உங்க மாமி வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா...?
அப்டியெல்லாம் இருக்காது. வழில கார் ஏதாவது ரிப்பேராகியிருக்கும். எப்டியும் வந்துடுவாங்க. நீ உள்ள வாப்பா... அய்யர் உன்னைக் கூப்பிடறார்...
கோபாலன் உட்புறம் செல்ல திரும்பியபோது சற்று தூரத்தில் ஹாரன் ஒலி கேட்டது.
சம்பத்தான் வந்தாச்சு... நீ போய் பூவும் சர்க்கரையும் கொண்டா பன்னீர் சொம்பும் கொண்டா...
சரண்யா உள்ளே ஓடினாள். அடுத்த வினாடி டிரே நிறைய பூவும் சந்தனமும், கல்கண்டுமாய் ஒரு கையில் பன்னீர் சொம்போடு திரும்பி வந்தாள்.
கார் நின்றது. சம்பத் மாமா முதலில் இறங்கினார். அவருக்குப் பின்னால் ஜெக ஜோதியாய் மாமி, அவளையடுத்து மலர்ந்த ரோஜாவாய் சங்கீதா. மூவரும் இறங்கியதும் ஆகாஷ் காரை ஒரு ஒரமாக ஒட்டிச் சென்று நிறுத்தினான்.
வாங்க வாங்க...
கோபாலன் கை கூப்பி பணிவோடு வரவேற்றார்.
சரண்யா பன்னீர் தெளித்து டிரேயை நீட்டினாள்.
இது யாரு தெரியுதா? சரண்யா. கோகிலாவோட ரெண்டாவது பொண்ணு. கம்ப்யூட்டர் சையின்ஸ் படிச்சுட்ருக்கா. நல்லா பாடுவா. சங்கீதம் கத்துக்கறா. கோபாலனுக்கு வலது கை இவதான். புத்திசாலி, பொறுமைசாலி. பக்குவம்...
சாரதா அவரை திரும்பிப் பார்க்க அதோடு நிறுத்திக் கொண்டார்.
ஐ ஆம் சங்கீதா. பேர்லதான் சங்கீதம் இருக்கு. பாட எல்லாம் தெரியாது
சங்கீதா முகம் நிறைய சிரிப்போடு தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டாள். கொஞ்சம் சந்தனம் எடுத்து கழுத்தில் பூசிக் கொண்டு சரண்யாவுக்கும் பூசிவிட்டாள். சட்டென்று நட்பு கொள்ள அவளால் மட்டும்தான் முடியும் என்பது போல் சரண்யாவின் கைகளைக் கோர்த்துக் கொண்டு உள்ளே போனாள். சம்பத் அவர்கள் போவதை